Published : 14 Sep 2022 05:31 AM
Last Updated : 14 Sep 2022 05:31 AM

தெலங்கானாவில் மின்கசிவால் தீ விபத்து - உயிரிழந்தவர்களில் இருவர் சென்னையை சேர்ந்தவர்கள்

செகந்திரபாத்தில் தீ விபத்து ஏற்பட்ட ஓட்டலில், தீயணைப்பு படையினரும், போலீஸாரும் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.படம்: பிடிஐ

ஹைதராபாத்: தெலங்கானாவில் மின் வாகன ஷோரூமில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரின் செகந்திராபாத் ரயில் நிலையம் சாலையில், பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே 5 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இங்கு தரைத்தளத்தில் பேட்டரி சார்ஜிங் நிலையமும், முதல் தளத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம் ஒன்றும் இயங்கி வருகிறது. அதற்கு மேல் உள்ள தளத்தில் ரூபி பிரைட் ஓட்டல் இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக சார்ஜில் போடப்பட்டிருந்த பைக் பேட்டரிகள் வெடித்தன. உடனடியாக முதல் மாடிக்கு தீ பரவியது. இதனால், முதல் மாடியில் இருந்த பேட்டரி பைக்குகளில் தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென மேல் மாடிக்கும் பரவியதால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை கண்ட அப்பகுதியினர் போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதற்குள் ஓட்டலில் தங்கியிருந்த சிலர், கழிவறை வழியாக பின்பக்க உள்ள பைப்புகளை பிடித்து இறங்கி உயிர் தப்பினர். ஆனால், முதல் 2 மாடிகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள், கடும் புகையினால் மூச்சுத் திணறி, உடல் கருகி உயிரிழந்தனர். இதற்குள் தீயணைப்பு வாகனங்கள் வந்து நள்ளிரவு வரை போராடி தீயை அணைத்தன.

2 பேர் சென்னைவாசிகள்

இந்த தீ விபத்தில், சென்னையைச் சேர்ந்த பாலாஜி (58), சீதாராமன் (48), டெல்லியைச் சேர்ந்த வீரேந்திர குமார் (50), ராஜீவ் மைக் (26), சந்தீப் மாலிக் (30), விஜயவாடாவைச் சேர்ந்த ஹரீஷ் (38) மற்றும் ஒரு பெண் என மொத்தம் 7 பேர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக யசோதா மற்றும் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

இந்த தீ விபத்து நடந்த கட்டிடத்தை ஆய்வு செய்த ஹைதராபாத் போலீஸார் கூறும்போது, “ரூபி பிரைட் ஓட்டல் கட்டிடத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் வெறும் 4 மாடிக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், சட்டவிரோதமாக 5 மாடிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், கார் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட தரைத்தளத்தில் பேட்டரி பைக்குகள் ரிப்பேர் செய்யவும், பேட்டரிகள் சார்ஜ் செய்வும் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் மாடியில் பேட்டரி பைக் ஷோ ரூம் இயங்குகிறது. கீழ் தளத்தில் இரவு சார்ஜில் போடப்பட்டுள்ள பைக்குகளில் ஒன்று வெடித்துள்ளதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் இந்த கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் பைக் ஷோ ரூம் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இதனிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி இறந்தவர்களுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதி உதவியும் அறிவித்துள்ளார்.

இதேபோன்று, தெலங்கானா அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என தெலங்கானா தொழில்துறை அமைச்சர் ராமா ராவ் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x