Published : 13 Sep 2022 10:29 AM
Last Updated : 13 Sep 2022 10:29 AM

தெலங்கானா | இ- பைக் ஷோரும் தீ விபத்தில் 8 பேர் பலி; மேலே இருந்த ஹோட்டலுக்கு தீ பரவியதால் விபரீதம்

தீ விபத்து நடந்த ரூபி ஹோட்டல்

செகந்திராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இ பைக் ஷோரும் ஒன்றில் திங்கள் கிழமை இரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் நான்கு தளம் கொண்ட கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரும் ஒன்றில் திங்கள் கிழமை இரவு 10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களுக்கும் தீ வேகமாக பரவியது. இந்த தளங்களில் ரூபி ஹோட்டல் என்னும் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இதில் 25 பேர் தங்கியிருந்துள்ளனர். தீ விபத்து குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கு தங்கி இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினார்.

விபத்து குறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் சி.வி. ஆனந்த் கூறுகையில் "போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், தரைதளத்தில் இருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோருமின் சார்ஜிங்க் யூனிட்டில் ஏற்பட்ட ஷாட் சர்க்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஷோரூமிற்கு மேலே இருந்த ஹோட்டலுக்கும் தீ வேகமாக பரவி உள்ளது. அங்கு 25 பேர் தங்கியிருந்துள்ளனர். அவர்களில் 6 பேர் மூச்சுத் திணறி இறந்துள்ளனர். மற்றவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குதித்துள்ளனர். இதனால் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்" என்று தெரிவித்தார்.

மேலும், தீ விபத்து ஏற்பட்ட போது கட்டிடத்தில் இருக்கும் தண்ணீர் தெளிப்பான் வேலை செய்யவில்லை என்றும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து தெலங்கானா உள்துறை அமைச்சர் முகம்மது மெகமூத் அலி கூறுகையில், "தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விராணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களை காப்பாற்ற கடுமையாக போராடினர். என்றாலும் அதிகமான புகை காரணமாக சிலர் இறந்துள்ளனர். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x