Published : 10 Sep 2022 11:25 AM
Last Updated : 10 Sep 2022 11:25 AM

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை அவசியம்: சசி தரூர் உள்பட 5 காங்., எம்.பி.,க்கள் கடிதம்

சசி தரூர், மனீஷ் திவாரி | கோப்புப் படம்.

புதுடெல்லி: கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத் தனமையும், நேர்மையும் தேவை என்று வலியுறுத்தி சசி தரூர் உள்பட ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

செப்டம்பர் 6 தேதியிடப்பட்டு இந்த கூட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சசி தரூர், கார்த்தி சிதம்பரம், ப்ரத்யூதி போர்டோலோய், அப்துல் காலீக், மனீஷ் திவாரி ஆகியோர் தான் இக்கடிதத்தை எழுதியுள்ளனர்.

கடிதத்தின் விவரம் வருமாறு: நாங்கள் வாக்காளர் பட்டியலைக் கேட்பதற்கு பல தவறான கற்பிதங்கள் எழுவது துரதிர்ஷ்டவசமானது, வேட்புமனு தாக்கலுக்கு முன்னராக மத்திய தேர்தல் குழு, மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து யாருக்கெல்லாம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அதிகாரம் வழங்கப்படுகிறது என்ற விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தப் பட்டியலில் யாருக்கு வேட்பாளரை பரிந்துரைக்கும் அதிகாரமும், யாருக்கெல்லாம் வாக்களிக்கும் அதிகாரமும் இருக்கிறது என்பது தெரியவரும். ஒருவேளை தேர்தல் குழுவுக்கு

இதை பகிரங்கமாக வெளியிடுவதில் ஏதேனும் தயக்கம் இருந்தால் அந்தத் தகவலை வாக்காளர்களுக்கும், போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்குமாவது ரகசியமாக தெரிவிக்கலாமே. ஏனெனில் தேர்தலில் போட்டியிடுபவர்களும், வாக்காளர்களும் நாட்டில் உள்ள 28 மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கும், 9 யூனியன் பிரதேச கட்சி அலுவலகங்களுக்கும் நேரில் சென்று வாக்காளர்கள் விவரங்களை அறிவது என்பது சாத்தியமற்றது. நியாயமான நேர்மையான வெளிப்படையான தேர்தல் நடைமுறையை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.

சசி தரூரும், மனீஷ் திவாரியும் ஜி23 குழுவிலும் இடம்பெற்று கடந்த 2020ல் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். கட்சியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறார் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில் தான் இந்தக் கடித விவரமும் வெளியாகியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்தக் கடிதம் வெளியாகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

என்ன சொல்கிறார் ராகுல்? காங்கிரஸ் தலைவர் தேர்தலை அக்டோபர் இறுதிக்குள் நடத்தி முடிக்க ஜெய்ப்பூர் சிந்தனைக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்பட்ட நிலையில், "நான் காங்கிரஸ் தலைவராகிறேனா இல்லையா என்பது தேர்தல் நடக்கும்போது உறுதியாகிவிடும். அதுவரை காத்திருங்கள். அந்த நேரம் வரும்போது நீங்களே அறிவீர்கள். அப்போது ஒருவேளை நான் தேர்தலில் தலைவர் பதவிக்கு நான் போடியிடாது இருந்தேன் என்றால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்" என்று ராகுல் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x