Published : 08 Sep 2022 07:20 AM
Last Updated : 08 Sep 2022 07:20 AM

காற்று மாசுபாட்டை தடுக்க ஜனவரி 1 வரை டெல்லியில் பட்டாசு விற்க, வெடிக்க தடை

புதுடெல்லி: டெல்லியில் வரும் ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு காற்று மாசு அளவை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக டெல்லி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் காற்று மாசுபாடு அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். டெல்லியில் இம்முறை ஆன்லைன் பட்டாசு விற்பனை மற்றும் டெலிவரிக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி வரை அமலில் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

இந்த தடையை கண்டிப்புடன் அமல்படுத்த டெல்லி காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும் என்றும் கோபால் ராய் கூறியுள்ளார்.

டெல்லியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 முதல் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரமும் தொடங்கியது. தடையை மீறி பட்டாசு வெடித்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாட்டில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள மாநிலமாக டெல்லி உள்ளது. வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் ஆகியவையே டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. இவை தவிர, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரிப்பதால் இந்தப் பண்டிகைக்கு முன்பு பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு டெல்லி அரசு தடை விதித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x