Last Updated : 31 Aug, 2022 12:24 PM

11  

Published : 31 Aug 2022 12:24 PM
Last Updated : 31 Aug 2022 12:24 PM

‘உ.பி.யில் மதக் கலவரங்கள் இல்லை’ - 2021 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையால் முதல்வர் யோகி மகிழ்ச்சி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மதக் கலவரங்கள் இல்லை என்ற தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2021-ம் ஆண்டிற்கான அறிக்கையின் குறிப்பால், அங்கு “ராமராஜ்ஜியம்” அமைவதாக சமூக வலைதளங்களில் பாஜகவினரும், பாஜக ஆதரவாளர்களும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றனர்.

வட இந்தியாவில் அதிகமான மதக் கலவரங்கள் நடைபெறும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் கருதப்படுகிறது. இதற்கு அம்மாநிலப் பகுதியின் வரலாற்றுச் சம்பவங்கள் காரணங்களாக உள்ளன. இதை சாதகமாக்கி அம்மாநிலத்தில் மதக் கலவரத்தின் அடிப்படையில் அரசியலும் நடப்பது உண்டு. பலசமயம் அரசியல் லாபத்திற்காகவே மதக் கலவரம் ஏற்படும் சூழலும் உ.பி.யில் இருந்தது.

இந்நிலையில், தேசிய குற்ற ஆவண காப்பகம், 2021-ம் ஆண்டு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையின்படி, உ.பி.யில் ஒரே ஒரு மதக் கலவரம் மட்டும் நடைபெற்றுள்ளது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, உ.பி.யில் மதக் கலவரம் இல்லை என்ற நிலையாக உள்ளது. மதக் கலவரங்கள் மீதான அறிக்கையில், மகராஷ்டிராவில் மிக அதிகமாக 378 நடைபெற்றுள்ளன. ஜார்க்கண்ட் 77, பிஹார் 51, ஹரியாணா 40 என உள்ளன.

இதனைத் தொடர்ந்து உ.பி. முதல்வர் யோகி, காவல் துறை அதிகாரிகளிடம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து உ.பி.யின் ஏடிஜிபியான பிரஷாந்த் குமார் கூறும்போது, ‘மகளிருக்கு எதிரான குற்றங்கள், கொலை, ஆள்கடத்தல் குற்றங்களும் குறைந்துள்ளன. இதில் 16 ஆவது இடத்திலிருந்து 28-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் குற்றங்களும் குறைந்து, உ.பி 21-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, உ.பி.யின் குற்றப் பதிவேட்டின் மீது ட்விட்டரில் 20,000 பேர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். இவை, சமூக வலைதளங்களின் 25.88 மில்லியன் பேரை சென்றடைந்து, இதன் ஹேஷ்டேகை 301 மில்லியன் பார்த்துள்ளனர். இவற்றில் மணிஷ் சிங் என்பவரது பதிவில், ‘முதல்வர் யோகி ராமராஜ்ஜியத்தை அமைப்பதில் வெற்றி கண்டு வருகிறார். 2021 தேசியக் குற்ற ஆவண காப்பக அறிக்கை சான்று’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம் பல ஆண்டுகளாகவே மதக் கலவரத்திற்கு பெயர்போனதாக உள்ளது. முசாபர்நகர், அலிகர், மீரட், வாரணாசி, முராதாபாத், புலந்த்ஷெஹர் போன்ற நகரங்கள் அடிக்கடி மதக் கலவரம் நடைபெறும் பட்டியலில் உள்ளன.

பாஜக ஆளும் உ.பி.யில் முதல்வராக யோகி அமர்ந்தது முதல் அதன் காவல் துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. புதிதாக 53,586 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உ.பி. காவல்துறையின் 65,568 அலுவலர்களுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உ.பி. காவல் துறையால் ரூ.129.4 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x