Last Updated : 31 Aug, 2022 07:39 AM

2  

Published : 31 Aug 2022 07:39 AM
Last Updated : 31 Aug 2022 07:39 AM

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த  உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த மைதானம் அரசுக்கு சொந்தமானது என கர்நாடக அரசு
அண்மையில் அறிவித்தது.

இதையடுத்து சுதந்திர தினத்தின்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் முறையாக அங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பந்தல் வைக்கப்போவதாக அறிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த‌ எஸ்டிபிஐ கட்சியினர், அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏ.எஸ். ஓகா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரங்களுக்கு முன்பு அங்கு நிலவிய சூழலையே தொடர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x