கட்டுமான நிறுவனங்களுக்காக மத்திய அரசு மர வங்கி திட்டம்

கட்டுமான நிறுவனங்களுக்காக மத்திய அரசு மர வங்கி திட்டம்

Published on

புதுடெல்லி: அடிப்படை கட்டுமான மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் விரைவான திட்ட ஒப்புதல் பெற மர வங்கி திட்டத்தை சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலை யங்கள் மற்றும் துறைமுகங்கள் மேம்பாட்டுக்கான அமைப்புகள் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் கணக்கு தொடங்க அனுமதிக்கபடும். இந்த அமைப்புகள் மேற்கொள்ளும் திட்டப் பணிகளில் மரங்களை வேறு இடத்தில் மாற்றி நடுவது அல்லது வெட்டுவதற்கான அவசியம் ஏற்படும் போது, அந்த நிறுவனத்தால் எத்தனை மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று அதன் மர வங்கி கணக்கு ஆராயப்படும். இதன் அடிப் படையில் விரைவான ஒப்புதல் அளிக்கப்படும்.
இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “மர வங்கிக்காக மரக் கன்றுகள் நடுவதற்கு பயன்பாட்டில் இல்லாத நிலம், பாதிக்கப்பட்ட வனப்பகுதிகளை இந்த அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலுக்கு ‘எகோ-டெபிட்’, பாதுகாக்கும் செயல்களுக்கு ‘எகோ-கிரெடிட்’ புள்ளிகள் வழங்கப்படும். இத்திட்ட கணக்குகளை பராமரிக்க
மத்திய, மாநிலங்களில் அமைப்புகள் ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in