Published : 29 Aug 2022 09:07 AM
Last Updated : 29 Aug 2022 09:07 AM

லிவ் இன், தன்பாலின உறவாளர்கள் நடத்துவதும் குடும்ப அமைப்புதான்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: லிவ் இன், தன்பாலின உறவாளர்கள் இணைந்து நடத்துவதும் குடும்ப அமைப்புதான். அவர்களும் சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப்புக்கு உரித்தானவர்கள் தான் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குடும்பம் என்பது இந்திய சட்டப்படி, இந்திய சமூக அமைப்பின்படி தாய், தந்தை, குழந்தைகள் கொண்ட மாறாத அமைப்பு என்று கொள்ளப்படுகிறது.

இதனால் பல சூழல்களில் ஒரு தனிநபரின் குடும்ப அமைப்பில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால் அது குடும்பமாக அங்கீகரிப்பட மறுக்கப்படுகிறது.

இந்நிலையில், குடும்ப உறவு என்பது திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் இணையர்கள், தன்பாலின உறவாளர்கள் நடத்தும் குடும்பத்தையும் உள்ளடக்கியதே என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போப்பண்ணா அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்பாலின உறவாளர்களின் திருமணம், லிவ் இன் உறவுகள் ஆகியனவற்றை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

வழக்கு பின்னணி: ஒரு பெண் தொடர்ந்த வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளது. வேலை பார்க்கும் அந்தப் பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்படது. அந்தப் பெண்ணின் கணவருக்கு ஏற்கெனவே ஒரு திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அவர் மூலம் தனக்குப் பிறந்த குழந்தைக்காக அப்பெண் மகப்பேறு விடுப்பு கோரியதால் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு குடும்பம் ஒற்றை பெற்றோர் கொண்டதாக இருக்கலாம். அதற்கான காரணம் துணையின் மறைவு, பிரிவு, விவாகரத்து என எதுவாகவும் இருக்கலாம். அதே போல் குழந்தைகளின் பாதுகாவலர்களாக இருக்கக்கூடியவர்கள் அதாவது தாய், தந்தை ஸ்தானத்தில் இருப்பவர்களும் கூட மறுமணம், ஸ்வீகரம் இல்லை வளர்ப்புக் குழந்தையாக பேணுவோரும் மாறலாம்.

குடும்ப உறவுகள் என்பது எப்போதும் பாரம்பரிய கட்டமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. லிவ் இன், தன்பாலின உறவாளர்கள் இணைந்து நடத்துவதும் குடும்ப அமைப்புதான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால் அப்பெண் தனது ஒரே உயிர்வழி வாரிசை பராமரிக்க மகப்பேறு விடுப்பு பெறுவதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x