Published : 26 Aug 2022 10:14 AM
Last Updated : 26 Aug 2022 10:14 AM

திருக்குறளில் 'பக்தி' ஆன்மாவை வேண்டுமென்றே சிதைத்தார் ஜியு போப்: ஆளுநர் ஆர்.என்.ரவி

விழாவில் தமிழக் ஆளுநர் ஆர்.என்.ரவி

புதுடெல்லி: திருக்குறளில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே சிதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் டெல்லி தமிழ் கல்வி கூட்டமைப்பின் (Delhi Tamil Education Association - DTEA) சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் ஆர்.என்.ரவி பேசியதாவது: பிரிட்டிஷாரின் கிழக்கு இந்திய கம்பெனியும், ஜி.யு.போப் போன்ற மிஷனரிக்களும் திருக்குறளின் பக்தி என்ற ஆன்மாவை வேண்டுமென்றே மறைத்துள்ளனர்

திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப். அவருடைய மொழிபெயர்ப்பே இன்றளவிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த மொழிபெயர்ப்பு காலனி ஆதிக்க மனோபாவத்துடன் இந்தியாவின் ஆன்மிக ஞானத்தை சிறுமைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவின் சிறந்த ஆன்மிகத்தன்மையை சிதைக்க முயன்றனர். அவர்கள் இந்திய வரலாறு, இந்திய கலாச்சாரத்தை சிதைத்து அதனை நிறைவேற்றினர். அதனால், இளைஞர்கள் காலனி ஆதிக்க மனோபாவத்துட;ன் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய தமிழ் இலக்கிய புத்தகங்களைப் புறக்கணிக்க வேண்டும். மாறாக அசல் புத்தகத்தின் சாராம்சத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்குறளை இப்போது ஏதோ வாழ்வியல் நெறிகள் என்பது போல் மட்டும் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கின்றனர். ஆனால் அது ஒரு இதிகாசம். அதில் நித்திய ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது. முதல் திருக்குறளில் உள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. ஆனால் அதன் ஆன்மாவை ஜி.யு போப் வேண்டுமென்றே தனது மொழிபெயர்ப்பில் சிதைத்துள்ளார். ஆதிபகவன் என்பதை அவர் வெறும் முதன்மைக் கடவுள் (Primal Deity) என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறு ஆளுநர் ரவி பேசியிருக்கிறார்.

அவரது பேச்சு வாதவிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.யு.போப் சிறு அறிமுகம்: கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (1820) பிறந்தவர். தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார். தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886-ல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் திருக்குறளை ‘Sacred Kural’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x