Published : 18 Oct 2016 09:32 AM
Last Updated : 18 Oct 2016 09:32 AM

புவனேஸ்வர் மருத்துவமனையில் தீ விபத்து: 22 பேர் பலி

ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரம் ஷாம்பூர் பகுதியில் இயங்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 நோயாளிகள் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "மருத்துவமனையின் நீரிழிவு நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு (திங்கள்கிழமை இரவு) திடீரென தீ விபத்து நேரிட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு 7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றன. தீ பிடித்த வார்டின் ஜன்னல், கதவுகளை உடைத்து அங்கு தீ ஜுவாலைகளில் சிக்கிக் கொண்டிருந்த நோயாளி களை தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டனர். எனினும் இந்த விபத்தில் 22 நோயாளிகள் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன. பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.யு நோயாளிகள்:

விபத்தில் பலியானவர்களில் பலர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தை மிகவும் துயரமான சம்பவம் என விமர்சித்திருக்கிறார் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எஸ்யுஎம் மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் வருத்தம்:

புவனேஸ்வர் மருத்துவமனை தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "புவனேஸ்வர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்காக வருந்துகிறேன். மனம் கனத்துப் போய் உள்ளது. இந்த விபத்தால் உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டாவுடன் விபத்து தொடர்பாக ஆலோசித்தேன். ஒடிஷா மாநிலத்துக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x