Published : 29 Oct 2016 11:14 AM
Last Updated : 29 Oct 2016 11:14 AM
இந்தியா மீது மறைமுகமான போரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. ஆனால் கோழைத்தனமாக, தீவிரவாதத்தின் உதவியுடன் இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது’ என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை முகாமில் நேற்று நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ‘பாகிஸ்தான் நம் மீது மறைமுக போரை நடத்தி வருகிறது. தீவிரவாதத்தின் உதவியுடன் அவர்கள் இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். தீவிரவாதத்தை பயன்படுத்தி, நாட்டில் ஸ்திரத்தன்மையை கெடுத்து, வளர்ச்சியை பாதிக்க முயற்சிக்கின்றனர்.
ஆனால், தீவிரவாதம் என்பது வீரர்களுக்கான ஆயுதம் அல்ல. அது கோழைகளுக்கு உரியது. ஒளிந்திருந்து, நமக்கு பின்னாலிருந்து தாக்குபவர்கள் கோழைகள். உலகளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடாக திகழ்வதால், இந்தியாவின் வளர்ச்சியை கெடுக்க, தீய நோக்குடன் சிலர் செயல்படுகின்றனர்’ என்றார்.
மேலும், ‘இந்திய-சீன எல்லையில், மிக கடுமையான கண்காணிப்புப் பணியில் நமது படையினர் ஈடுபட்டிருப்பதால், சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறுவது இந்தாண்டு, 60 சதவீதம் குறைந்துள்ளது’ என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.முன்னதாக, ‘எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள், எதிரிகளை நோக்கி முதலில் சுடுவதை தவிர்க்க வேண்டும். அதேசமயம், அவர்கள் தாக்குதல் நடத்தும்போது, துப்பாக்கிக் குண்டுகளை எண்ணிக்கொண்டிருக்கத் தேவையில்லை’ என, அறிவுறுத்தினார். -
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT