Published : 24 Aug 2022 06:32 AM
Last Updated : 24 Aug 2022 06:32 AM

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து | தெலங்கானா பாஜக எம்எல்ஏ இடைநீக்கம்

ராஜாசிங்

ஹைதராபாத்: சர்ச்சை பேச்சு காரணமாக கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங்கை, பாஜக மேலிடம் நேற்று சஸ்பெண்ட் செய்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங் (45). நபிகள் நாயகம் மீது அவதூறு பேசியதாக, இவர் நேற்று அதிகாலையில் ஹைதராபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, காமெடி மேடை பேச்சாளரான முனாவர் ஃபாருக்கி என்பவர், ஒரு நிகழ்ச்சியின்போது, ராமர் மற்றும் சீதையை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால், எம்.எல்.ஏ ராஜா சிங், அடுத்த முறை முனாவர் ஃபாருக்கி இந்து கடவுள்களை தரக்குறைவாக பேசினால், நான் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசுவேன் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முனாவர் ஃபாருக்கி கலந்துகொண்டு, மீண்டும் இந்து கடவுள்கள் குறித்து கேலி பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாஜக எம்.எல்.ஏராஜாசிங், நபிகள் நாயகம் குறித்துபேசி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது ஹைதராபாத்தில் வைரல் ஆனது.

இதனால், எம்ஐஎம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், ஹைதராபாத் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர், ஹைதராபாத்தில் போலீஸ் ஆணையர் அலுவலகம் உட்பட அனைத்து போலீஸ் நிலையங்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பாஜக எம்.எல்.ஏவை கைது செய்ய வேண்டுமென அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மதக்கலவரம் ஏற்படுமோ எனும் அச்சத்தில் மக்கள் பீதி அடைந்தனர். இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கை ஹைதராபாத் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து ராஜா சிங்சஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பாக ராஜா சிங் ஆதரவாளர்களுக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே நீதிமன்றத்துக்கு வெளியே கை கலப்பும், வாக்குவாதங்களும் நடந்தன. போலீஸார் நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று மாலை, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக மத நல்லெண்ணத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசியதாக பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்கை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக மேலிடம் அறிவித்தது.

மேலும், இது தொடர்பாக இன்னும் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென வும் பாஜக மேலிடம் எம்.எல்.ஏராஜாசிங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. எனினும், சில மணிநேரங்களில் அவர் ஜாமினில் விடுதலை ஆனார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x