Published : 23 Aug 2022 03:13 PM
Last Updated : 23 Aug 2022 03:13 PM

“திமுக மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம்” - உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: "திமுக கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். மேலும், பல விஷயங்கள் குறித்து கூற வேண்டியுள்ளது, பேசாமல் தவிர்ப்பதால் அவை குறித்து எங்களுக்கு தெரியாது என நினைக்க வேண்டாம்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபத்யா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வுமுன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, "இந்த விவகாரத்தில் பிரச்சினை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது கொள்கை சார்ந்த விவகாரம். எனவே இதில் தலையிட முடியாது என்று கூற முடியுமா?

உதாரணமாக, ஏதாவது சட்டம் இயற்றும்போது அதனை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார். இந்த தேர்தல் இலவசங்கள் விவகாரம் தொடர்பாக இங்கு விவாதிப்போம், அது தொடர்பாக அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டு பின்னர் முடிவு செய்யலாம் என்றே கூறுகிறோம் என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இந்த விவகாரத்தில் முதலில் பொருளாதார நிலை தொடர்பாக நாம் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். காரணம், இலவசங்கள் குறித்த அறிவிப்பால் கடும் பாதிப்புக்குள்ளாவது பொருளாதாரம்தான் என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "தேர்தல் இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுதான். பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சியினரும் இலவசம் வேண்டும் என்ற மன நிலையிலேயே உள்ளனர். எனவே இலவசங்கள் தொடர்பான அறிவிப்பு விவகாரத்தில் தற்போதைய மனுவை ஒரு காரணியாக எடுத்து, அனைத்து கோணங்களிலும், அனைத்து விதத்திலும் விவாதிப்போம்" என்று தெரிவித்தார்.

அப்போது மத்திய அரசு தரப்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல், "இலவசங்கள் குறித்த அறிவிப்பு விவகாரத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. குறிப்பாக ஒரு கட்சி சேலை, இலவச கலர் டிவி தருவதாகவும், இலவச மின்சாரம் வழங்குவதாகவும் அறிவிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பு வரி செலுத்தும் மக்களின் தலையில் விழுகிறது. எனவேதான் இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக இலவச மின்சார அறிவிப்பு விவகாரத்தால் மின் கழகங்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றன. மேலும், டெல்லி முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யுமளவிற்கு நிலைமை உள்ளது" என்றார்.

அப்போது, தலைமை நீதிபதி, "இலவசங்கள் குறித்த விவகாரத்தில் தேர்தல் சமயத்தில் அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ளும். ஆனால், மற்ற நேரங்களில் இலவச அறிவிப்பு என்பதைத்தான் நாம் முக்கியமானதாக எடுத்து கொள்ள வேண்டும். இலவசங்கள் வழங்குவது என்பது ஒரு முக்கியமான பிரச்சினை இதுகுறித்து நிச்சயமாக விவாதம் என்பது தேவை.

மாநிலங்கள் இலவசங்களை வழங்க முடியாது என மத்திய அரசு ஒருவேளை சட்டம் இயற்றுவதாக வைத்துக் கொள்வோம். அத்தகைய சட்டம் சரியானதா? இல்லையா? என்பதை நீதித்துறை ஆய்வுக்குரியது அல்ல என்று உங்களால் சொல்ல முடியுமா? எனவே, நாட்டின் நலனுக்காக தான் இந்தப் பிரச்சினையை விசாரிக்கிறோம் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

அப்போது, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்,"ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும் இலவசங்களால் மாநிலத்தின் கடன் தொகையே அதிகரிக்கிறது. இது மாநில வளர்ச்சியை பாதிக்கிறது.இந்த இலவசங்கள் என்பது ஊழலுக்கு வழி வகுக்கிறது.

எனவே தேர்தல் நேர இலவச அறிவிப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் கவனித்து கொள்ளும் என தெரிவித்தால் எப்படி? அது தொடர்பாக சில உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறப்படும் இலவசங்கள் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கருத்துகள் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த இலவச அறிவிப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

தேர்தல் இலவச வாக்குறுதிகள் இவ்வாறு தொடர்ந்தால் அது மாநிலத்தின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிப்படையச் செய்வதோடு, பாதளத்துக்கு எடுத்து செல்லும்" என்று தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி, "இங்கு அனைத்து தரப்பினரும் தேர்தல் இலவசங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக வாதிடுகிறீர்கள். நாங்கள் மொத்தமாக இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம். மேலும், ஆட்சிக்கு வருவதற்கு முன் மாநிலத்தின் பொருளாதார நிலையை எவ்வாறு ஒரு கட்சி அறிந்திருக்கும்?

இந்த விவகாரத்தில் தேர்தல் இலவசம் என்பதை அனைத்து தரப்பும் ஒரு பிரச்சினையாக கருதுகிறீர்கள்? ஆனால், தேர்தல் இலவசத்தை தாண்டி அரசின் கொள்கை முடிவு, திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது. அதுவும் கவனிக்கப்படவும் சரிபடுத்தப்படவும் வேண்டியவை. எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரை இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது.

எனவேதான் இந்த இலவசங்கள் குறித்த விவகாரத்தை கையில் எடுக்கும்போது, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என நினைத்தோம். மேலும் இலவசங்கள் தொடர்பான விவகாரத்தில் ஓர் ஆணையம் அமைக்கலாம் என்றும் நினைத்தோம். ஏனெனில் இலவச அறிவிப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தால் அதற்கு இந்த ஆணையம் உதவிகரமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தமது தரப்பு வாதத்தை வைக்க முன்வந்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "இந்த வழக்கில் நீங்கள் ஆதரவாக களமிறங்கும் திமுக கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். மேலும், பல விஷயங்கள் குறித்து கூற வேண்டியுள்ளது. பேசாமல் தவிர்ப்பதால் அவை குறித்து எங்களுக்கு தெரியாது என நினைக்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், "தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உச்ச நீதிமன்றம் குறித்த தமிழக நிதியமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்தார்

இதனையடுத்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, "மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு கால்நடைகள் வழங்குவது அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றவே வழங்கப்படுகிறது. அதேபோல கிராமப்புற மாணவிகள் கல்வி கற்று பயனடைய அவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என்று கூறவில்லை.

மேலும், இலவசங்கள் மற்றும் நலத் திட்டங்களையும் அதன் வேறுபாட்டையும் நாங்களும் அறிவோம். சாதாரண குடிமக்கள்கூட இதன் வேறுபாட்டை அறிவர்" என்று தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடரும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னதாக, இந்த வழக்கில் திமுக சார்பில் வழக்கறிஞர் பி.வில்சன் எழுத்துபூர்வமாக முன்வைத்த வாதத்தின் முழு விவரம்: இலவசங்கள் தமிழகத்தை ஏழ்மை நிலைக்கு தள்ளிவிடவில்லை: உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x