Published : 11 Jun 2014 10:00 AM
Last Updated : 11 Jun 2014 10:00 AM
கர்நாடக மாநிலத்தில் காலியாகவுள்ள 4 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த 4 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதால் அவர்கள் போட்டியின்றித் தேர்வாவது உறுதியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து தடுக்க வேண்டும் என்பதற்காகவே, இத்தகைய சமாதானப் போக்கை கட்சிகள் கடைப்பிடித்ததாகத் தெரியவந்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட 4 பேரின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது.
காங்கிரஸ் சார்பில் பி.கே.ஹரி பிரசாத் மற்றும் ராஜீவ் கவுடா, பா.ஜ.க. சார்பில் பிரபாகர் கொரே, தேவகவுடாவின் ம.ஜ.த.சார்பாக குபேந்திர ரெட்டி மற்றும் தொழிலதிபர் மல்லிகார்ஜூனா உள்ளிட்ட 2 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய 44 சட்டப் பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் தேவை.கர்நாடக சட்டப்பேரவையில் 123 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் 2 மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்கும்.
அதே போல 44 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.தனது ஒரு வேட்பாளரையும், 40 உறுப்பினர்களைக் கொண்ட ம.ஜ.த. சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் தனது வேட்பாளரை தேர்வு செய்யும். எனவே, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தவிர மீதமுள்ள 31 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை காங்கிரஸ், சுயேச்சைகளுக்கு ஆதரவாக அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
கட்சிகளுக்குள் ஒற்றுமை
இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்கிய இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை தங்களுடைய வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். இதனால் கர்நாடகத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி விட்டது.
காங்கிரஸ் சார்பாக 3 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், 2 பேர் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கான பின்னணியை விசாரித்த போது, மாநிலங்களவைத் தேர்தலில் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டால்,காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுப்பதில் சுணக்கம் ஏற்படும். அதனால் கர்நாடக மக்களுக்கு தான் தீங்கு உண்டாகும்.
எனவே காங்கிரஸ் சார்பாக 2 வேட்பாளர்களை மட்டும் நிறுத்த வேண்டும் என முதல்வர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்தே அனைத்துக் கட்சியினரும் தேர்தலில் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், ஒற்றுமையுடன் சமாதானப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT