Published : 22 Aug 2022 01:23 PM
Last Updated : 22 Aug 2022 01:23 PM

“போராட்டம் நடத்தினால்தான் கவனம் பெறுவோமா?” - டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்ட விவசாயிகள்

புதுடெல்லி: “நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்” என்று சம்யுக்தா கிசான் மோர்சா சங்க தலைவர் பல்தேவ் சிங் சிர்ஸா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளனர். எங்கள் கோரிக்கைகள் எப்போதுமே போராடினால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. அது ஏன்? அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். இங்கு போராடத் திரண்டிருப்பவர்கள் அனைவருமே அரசியல் சார்பற்றவர்கள்.

கடந்த நவம்பரில் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன. அதன் பின்னர் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்படும். அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் அப்படியேதும் இதுவரை நடைபெறவில்லை. அந்த அமைப்பே கேலிக்கூத்தாக இருக்கிறது.

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றனர். அதுவும் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை. லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்கு நீதி கோரி வருகிறோம். அது நிலைநாட்டப்பட வேண்டும். எம்எஸ்பி என்ற விவசாய உற்பத்திகளுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை எம்.எஸ்.ஸ்வாமிநாதன் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.

கடும் போக்குவரத்து நெரிசல்; கைது நடவடிக்கை: அண்டை மாநிலங்களில் இருந்து 5000 விவசாயிகள் திரளக் கூடும் என்பதால் போலீஸார் டெல்லியைச் சுற்றி எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கர்னால் பைபாஸ், நரேலா எல்லை, பாலம் மேம்பாலம், அரபிந்தோ மார்க் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனமும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுப்பிவைக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மட்டும் கூடுதல் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

டெல்லி உத்தரப் பிரதேச எல்லையான காசியாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x