Published : 11 Apr 2014 12:52 PM
Last Updated : 11 Apr 2014 12:52 PM

பிஹார் தேர்தலில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 2 வீரர்கள் பலி - 7 பேர் காயம்

பிஹார் தேர்தல் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற சி.ஆர்.பி.எப். வீரர்களை குறிவைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

பிஹாரின் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 131-வது சி.ஆர்.பி.எப். பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் இரண்டு ஜீப்புகளில் நேற்று அதிகாலை தாராபூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

சவா லேக் பாபா மந்திர் அருகே அவர்கள் வந்தபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திடீரென கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். பின்னர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இந்தத் தாக்குதலில் ரவீந்திரா ராய், சோனே கோரா ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தாக்குதல் நடைபெற்ற இடம் முங்கர் மாவட்டம், ஜமுய் தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்தத் தொகுதியில் ஜன லோக்சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் போட்டியிடுகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியபோது, மக்களவைத் தேர்தலைப் புறக் கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெரிவித்தனர்.

இதனிடையே கயா பகுதியில் 30 கிலோ எடை கொண்டு 6 வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர். அந்தக் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x