Published : 21 Aug 2022 03:55 AM
Last Updated : 21 Aug 2022 03:55 AM

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலுத்திய மாநிலங்கள் - நிலுவை ரூ.1,037 கோடியாக குறைந்தது

புதுடெல்லி: மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை உரிய நேரத்தில் செலுத்தாமல் ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருந்ததால், மின் சந்தையில் மின்சாரம் வாங்குவதற்கும், விற்பதற்கும் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்தது.

இந்நிலையில், ஆந்திரா, மகாராஷ்டிரா உட்பட 6 மாநிலங்கள் பாக்கித் தொகையை உடனடியாக திருப்பிச் செலுத்தியுள்ளன. ஏறத்தாழ ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கி நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவை ரூ.1,037 கோடியாகக் குறைந்துள்ளது. தடை விதிக்கப்பட்ட ஒரே நாளில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவை 80 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பாக்கியை திருப்பிச் செலுத்திய மாநிலங்கள், தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விற்பனை செய்யவும், தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வெளிச் சந்தையிலிருந்து கொள்முதல் செய்யவும் மத்திய மின் சந்தையை நிறுவியுள்ளன.

இந்த சந்தையைக் கண்காணித்து நிர்வகிப்பதற்காக, மத்திய மின் துறை அமைச்சகம் ‘பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்’ (பொசோகோ) என்ற பொதுத் துறை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு, தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மொத்தம் ரூ.5,085 கோடி நிலுவை வைத்திருந்தன. குறிப்பாக, தெலங்கானா மாநிலம் ரூ.1,380.96 கோடி, தமிழகம் ரூ.926.11 கோடி நிலுவை வைத்திருந்தன. மேலும், ராஜஸ்தான் ரூ.500.66 கோடி, ஜம்மு-காஷ்மீர் ரூ.434.81 கோடி, ஆந்திரா ரூ.412.69 கோடி, மகாராஷ்டிரா ரூ.381.66 கோடி, கர்நாடகா ரூ.355.20 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ.229.11 கோடி, ஜார்கண்ட் ரூ.214.47 கோடி, பிஹார் ரூ.173.50 கோடி, சத்தீஸ்கர் ரூ.27.49 கோடி, மணிப்பூர் ரூ.29.94 கோடி, மிசோரம் ரூ.17.23 கோடி பாக்கி வைத்திருந்தன.

இந்நிலையில், இந்த 13 மாநிலங்கள் மத்திய மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கவும், விற்கவும் கடந்த வியாழக்கிழமை பொசோகோ தடை விதித்தது.

இதையடுத்து ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பிஹார் , மணிப்பூர், சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்கள் பாக்கியை திருப்பிச் செலுத்தின. இதனால், அந்த மாநிலங்கள் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மின் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், ஜம்மு-காஷ்மீர் அதிகபட்சமாக ரூ.435 கோடியும், மத்தியப் பிரதேசம் ரூ.234 கோடியும் பாக்கி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலுவைத் தொகையை தவிர, மின் பகிர்மான நிறுவனங்களின் ஒட்டுமொத்த பாக்கி ரூ.1 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி தீர்வு காணப்பட்டு வருகிறது.

மின் விநியோகம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய மின் துறை அமைச்சகத்துக்கு பதில் அளித்துள்ளதாக தெலங்கானா மின் கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

மத்திய மின் சந்தையில் 13 மாநிலங்களின் மின் வர்த்தகத்துக்கு தடைவிதிக்கப்பட்டதையடுத்து, ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.7-ஆக இருந்த நிலையில், நேற்று அதிகபட்சமாக ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.12-ஆக அதிகரித்தது.

மின் பகிர்மான நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகை செலுத்த வசதியாக 48 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மின் உற்பத்தி நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள தொகைக்கு, தாமதக் கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மின் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறும்போது, "மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளபடி, மாநிலங்கள் மின் வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பல இடையூறுகள் ஏற்படலாம்.

பொதுவாக, மின் விநியோக நிறுவனங்கள், தேவை மற்றும் விநியோகம் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைக்கவே, வெளிச்சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்குகின்றன. மத்திய அரசின் திடீர் முடிவு, மாநிலங்களின் பல பகுதிகளில் மின் தடைக்கு வழிவகுக்கும்" என்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

இதற்கிடையில், கரூரில் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, "தமிழக அரசின் மின் கொள்முதல் நிலுவைத் தொகை கடந்த 4-ம் தேதியே செலுத்தப்பட்டுவிட்டது. இதில் ரூ.70 கோடி மட்டுமே பாக்கி உள்ளது. அந்தத் தொகையும் இரு தினங்களுக்குள் செலுத்தப்பட்டுவிடும்.

மத்திய மின் சந்தையில் இருந்து இரு நாட்களாக மின்சாரம் வாங்காமலேயே மின் தேவையைச் சமாளித்துள்ளோம். இதற்கு நிர்வாகத் திறமைதான் காரணம். மேலும், காற்றாலை, சூரிய மின்சக்தி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x