

ஆந்திராவில் பெண்களை கேலி செய்பவர்கள் (ஈவ் டீசிங்) மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என அம்மாநில டிஜிபி சாம்பசிவ ராவ் எச்சரித்துள்ளார்.
விஜயவாடாவில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஆந்திராவில் பெண்களை கேலி செய்யும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே இதைத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் சாதாரண உடையணிந்த பெண் போலீஸார் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். கல்லூரி பகுதிகளில் போலீஸாரின் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பெண்களை பின்தொடர்ந்து கேலி செய்தாலோ அல்லது தொலைபேசி மூலம் அழைத்து தொல்லை கொடுத்தாலோ சம்பந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து எச்சரிப்போம். அதையும் மீறி தொல்லை கொடுக்கும் இளைஞர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 நாட்களில் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு டிஜிபி சாம்பசிவ ராவ் கூறினார்.