Published : 20 Aug 2022 05:12 AM
Last Updated : 20 Aug 2022 05:12 AM

பெரிதாக பேசுபவர்களிடம் தொலைநோக்கு இல்லை - எதிர்க்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘நாட்டை பற்றி கவலைப்படாதவர்கள்தான் பெரிதாக பேசுவார்கள், அவர்களால் குடிநீர் பாதுகாப்பு போன்ற பெரிய தொலைநோக்குடன் பணியாற்ற முடியாது’’ என எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்ட நிகழ்ச்சி காணொலி மூலம் நேற்று நடந்தது. இந்தத் நலத்திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது:

நாட்டை முன்னேற்ற நீண்ட கால அணுகுமுறை தேவை. நாட்டை பற்றி கவலைப்படாதவர்களால் மிக பெரிதாக பேச மட்டும்தான் முடியும். அவர்கள் நிறைய பேசுவார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை இருக்காது. அவர்களால் குடிநீர் பாதுகாப்பு போன்ற மிகப் பெரிய தொலைநோக்கு திட்டங்களுடன் பணியாற்ற முடியாது.

வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 7 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சுதந்திரம் பெற்றதில் இருந்து 70 ஆண்டுகளில், 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் வசதி இருந்தது. ஒரு அரசை உருவாக்க, நாட்டைஉருவாக்கும் அளவுக்கு கடினமாகஉழைக்க வேண்டாம் என்பதுஉண்மை. நாட்டின் முன்னேற்றத் துக்கு பணியாற்றுவதைதான் நாம் அனைவரும் தேர்ந்தெடுத்துள்ளோம். அதனால்தான் , நாம் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நாட்டை பற்றி கவலைப்படாதவர்கள், நாட்டின் தற்போதையநிலை அல்லது எதிர்காலம் வீணாவது பற்றி கவலைப்பட மாட்டார்கள். இது போன்றவர்களால் பெரிதாக பேச முடியும், ஆனால் தண்ணீருக்கான மிகப் பெரிய தொலைநோக்குடன் ஒருபோதும் பணியாற்ற முடியாது.

நாட்டில் 16 கோடி கிராம வீடுகள் இருந்தன. அவர்கள் தண்ணீருக்காக வெளியிடங்களை சார்ந்திருந்தனர். நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வரும்நிலையில் இருந்தனர். அதனால்தான், 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் வழங்கப்படும் என நான் செங்கோட்டையில் இருந்து அறிவித்தேன்.

இந்த திட்டத்துக்காக ரூ.3.60 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. கரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோதும், இந்திட்டம் தாமதம் அடையவில்லை. இந்த தொடர் முயற்சியின் காரணமாக மூன்றே ஆண்டுகளில், கடந்த 70 ஆண்டுகளில் செய்ததை விட இரண்டு மடங்குக்கு அதிகமான பணிகள் செய்யப்பட்டுள்ளன.

வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் சான்றிதழை பெற்ற முதல் மாநிலமான கோவாவுக்கு வாழ்த் துக்கள். தாத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு ஆகிய யூனியன் பிரதேசங்களும் முதல் முறையாக இந்த சாதனையை அடைய உள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x