“நான் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவள்” - ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக சேர்ப்பு

“நான் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவள்” - ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக சேர்ப்பு
Updated on
2 min read

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. அவரது ரூ.7 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டன.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தற்போது ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் நேரடியாக கருத்து தெரிவிக்காமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை ஒன்றை இட்ட ஜாக்குலின் அதில், "நான் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவள், நான் சக்தி வாய்ந்தவள், நான் என்னை ஏற்றுக்கொள்கிறேன், எல்லாம் சரியாகிவிடும். நான் வலுவாக இருக்கிறேன், எனது இலக்குகள் மற்றும் கனவுகளை நான் அடைவேன், என்னால் அதைச் செய்ய முடியும்" என்று மேற்கோளை சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கின் பின்னணி:

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவரை டெல்லி போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர்.

அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோர், ரூ.2000 கோடி பணமோசடி வழக்கில் 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதாகக் கூறிய சுகேஷ் சந்திரசேகர், அவ்விருவரின் மனைவிகளிடமிருந்து ரூ.200 கோடி பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உட்பட 8 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின்போது, சுகேஷ் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்புள்ள 4 பெர்சிய பூனைகள், மினி ஹெலிகாப்டர், சொகுசு ரக பார்ஷே கார், ரோலக்ஸ் கடிகாரம் என பல கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. ஜாக்குலின் தவிர, மற்றொரு பாலிவுட் நடிகையான நூரா ஃபதேயிக்கும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை சுகேஷ் பரிசளித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஜாக்குலினும் நூரா ஃபதேயியும் அமலாக்கத் துறையினால் விசாரிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாக்குலின் - சுகேஷ் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் உலா வரத் தொடங்கின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in