Published : 17 Aug 2022 09:15 AM
Last Updated : 17 Aug 2022 09:15 AM

காங்கிரஸ் தலைமை பொறுப்பு: மவுனம் காக்கும் ராகுல் காந்தி; தேர்தல் ஏற்பாட்டாளர்கள் குழப்பம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கான காலம் நெருங்கிவரும் சூழலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி மவுனம் காப்பது தேர்தல் ஏற்பாட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21ல் இருந்து செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால் தலைவர் பதவி போட்டி குறித்த தனது முடிவை ராகுல் காந்தி இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியை ஊக்குவித்து தலைவர் பதவிக்கு போட்டியிட வைப்பதற்கு பல்வேறு உத்திகளையும் கையாண்டு சோர்ந்துவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைவர் பதவி போட்டி குறித்து ராகுல் காந்தி தெளிவாக ஏதும் தெரிவிக்காததால் தேர்தல் முடிவை இறுதி செய்யும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவதும் தள்ளிப்போகிறது.

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவானது மதுசூதன் மிஸ்ட்ரி தலைமையில் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இப்போது தேர்தல் தேதியை அறிவித்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுப்போம் என்று தேர்தல் குழு தெரிவித்துள்ளது.

நாங்கள் எங்கள் பணியை செய்து கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் காரிய கமிட்டி தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால் போதும். நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து 9000 பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக அறியப்பட்டுள்ளனர் என்று மிஸ்ட்ரி கூறினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலோடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.

தள்ளிப்போக வாய்ப்பு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதியன்று, கன்னியாகுமரியில் பாரத் ஜோதோ யாத்திரையை தொடங்குகிறார். உதய்பூரில் நடந்த சிந்தனைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவின்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களை தேர்வு செய்து அங்கு மக்கள் யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த யாத்திரையின் நோக்கம் அரசியல் சாசன உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பேண, பிரிவினையை எதிர்கொள்ள ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆதரவைத் திரட்டுவது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களில் 3500 கி.மீ தூரம் இந்த யாத்திரை நடைபெறுகிறது. கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர் காங்கிரஸின் இந்த முன்னெடுப்பிற்கு வரவேற்புகள் எழுந்துள்ளன.

ஒருவேளை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி ஏதும் உறுதியாக தெரிவிக்காவிட்டால் தேர்தல் தேதி மேலும் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ராகுல் காந்தி ஒப்புக்கொள்ளாவிட்டால் அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக், குமாரி ஷைலஜா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரில் யாரேனும் நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் கட்சியினர் அந்த மாதிரியான சூழலில் 2024 தேர்தலை கருத்தில் கொண்டு சோனியா காந்தியே தலைமைப் பதவியை தொடர விரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

பிடிவாதம் காட்டும் ராகுல்: கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவியைத் துறந்த ராகுல் காந்தி, காங்கிரஸுக்கு காந்தி குடும்பத்தில் இருந்துதான் தலைவர் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று கூறியிருந்தார். அதே நிலைப்பாட்டில் இன்னும் அவர் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் காங்கிரஸ் நடத்தவுள்ள பாரத் ஜோதோ யாத்திரையில் தன்னை முன்னிறுத்தாமல் கட்சியையே தொண்டர்கள் முன்னிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x