Published : 17 Aug 2022 01:42 AM
Last Updated : 17 Aug 2022 01:42 AM

காங்கிரஸ் | நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பதவியை ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்

காஷ்மீர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸின் பிரசாரக் குழுத் தலைவராக உள்ள ஆசாத், பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தலைவர் பதவி மட்டுமல்ல, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார். முதல்கட்ட தகவலின்படி, இந்த நியமனம் தனது மதிப்பிற்கு குறைவானதாக கருதியதால் ஆசாத் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸின் மூத்த தலைவரான ஆசாத், அந்தக் கட்சியின் அகில இந்திய அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ள அவரை மீண்டும் மாநில அரசியலில் இறக்கியது பிடிக்காததால் ராஜினாமா செய்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸின் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்துவருகிறார் ஆசாத். இதை வெளிப்படையாகவும் பல முறை அறிவித்துள்ளார். தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிருப்தியின் தொடர்ச்சியாகவே மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகள் சிலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x