Published : 16 Aug 2022 09:21 PM
Last Updated : 16 Aug 2022 09:21 PM

டெல்லியில் அதிகரிக்கும் கரோனா பரவல்: நாள் ஒன்றுக்கு 8-10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என அரசு நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

“கரோனா தொற்று பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று பரவலின் முடிவு என்பது தொலைதூரத்தில் உள்ளதாக தெரிகிறது. நாம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம்” என டெல்லியின் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ட்வீட் செய்துள்ளார்.

“தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை சிறப்பானதாக உள்ளது. மறுபக்கம் தொற்றுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கரோனா சிகிச்சை வார்டுகளில் உள்ள 9000 படுக்கைகளில் 500 படுக்கைகள் நிரம்பி உள்ளன. 20 பேர் ஐசியூ சிகிச்சையில் உள்ளனர். 65 பேருக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் கொள்ள தேவையில்லை. ஆனால், நாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்” என பொது சுகாதார வல்லுநர் டாக்டர்.சுனிலா கார்க் தெரிவித்துள்ளார். இவர் லான்செட் கமிஷனின் உறுப்பினரும் கூட.

தினசரி கரோனாவில் உயிரிழப்போ எண்ணிக்கை 8-ல் இருந்து 10 வரை உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

திங்கள் அன்று டெல்லியில் 1227 பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு முன்னர், நகரில் கடந்த 12 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 2000-க்கும் மேல் என்ற எண்ணிக்கையில் இருந்துள்ளது. ஞாயிறு அன்று 2,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,136 ஆக இருந்துள்ளது. 10 பேர் அன்று ஒருநாள் மட்டும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், “தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் பதட்டம் கொள்ள வேண்டாம்” என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த வாரம் சொல்லி இருந்தார்.

கடந்த ஜனவரி 13 அன்று சுமார் 28,867 பேர் டெல்லியில் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x