Published : 14 Oct 2016 08:48 AM
Last Updated : 14 Oct 2016 08:48 AM

நவ.16-ல் குளிர்கால கூட்டத்தொடர்: ஜிஎஸ்டி-யை அமல்படுத்த முன்கூட்டியே தொடங்குகிறது

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு முடிவு:



நாடாளுமன்ற குளிர்காலக் கூட்ட த்தொடர் வரும் நவம்பர் 16-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் நடைபெறவுள்ள இத்தொடர் வரும் டிசம்பர் 16-ம் தேதி நிறைவடையும். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இம்முடிவை நேற்று எடுத்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் தொடங்குவது தான் வழக்கம். ஆனால், மத்திய அரசின் கனவு சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தவதற்காக குளிர்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே கூட்டப்பட உள்ளது.

மேலும், பொது பட்ஜெட்டை ஒரு மாதம் முன்கூட்டியே தாக்கல் செய் யவும் அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாத கடைசி வேலைநாளில் தாக்கல் செய்யப் படும். இம்முறை, நிதியாண்டின் முதல் நாளான ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்தே வருவாய் திரட்டல் மற்றும் மூலதனச் செலவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, பொது பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி-க்காக அரசியலமைப்பு (122-வது) சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. ஆனால், வரும் 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக, மத்திய ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மசோதாக்களை நிறை வேற்றியாக வேண்டும்.

இந்த இரு சட்டங்களும், வணிகம் மற்றும் வர்த்தகத்தில் சரக்கு மற்றும் சேவைகள் மீது ஜிஎஸ்டி வாயிலாக வரிவிதித்தல், வசூலித்தலில் மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கின்றன. மேலும் சரக்கு, சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பொருள்கள், ஜிஎஸ்டி வரிவிதிப்பு விகிதம், இழப்பீடு உத்திகள் உள்ளிட்டவற்றைக் கையாளும். இவ்விவகாரங்கள் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இக்கூட்டத்தொடரில், தொழிலாளர் சீர்திருத்தங்களிலும் அரசு கவனம் செலுத்தும். தொழிலாளர்களுக்கான ஊதிய விதிமுறைகளுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். இச்சட்டம் அனைத்துப் பிரிவுகளிலும் தொழிலா ளர்களுக்கான குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும்.

நிறுவனங்கள் 300 தொழிலாளர்கள் வரை எளிதில் ஆட்குறைப்பு செய்வதற்கு வகை செய்யும் தொழிற் சாலை உறவுகள் சட்ட திருத்தத்துக்கு அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற முடியும் என தொழிலாளர் அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

முந்தைய நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களுடன் ஒப்பிடும்போது கடந்த மழைக்காலக் கூட்டத் தொடர் எதிர்க் கட்சிகளின் அதிகபட்ச எதிர்ப்பின்றி ஓரளவு சுமுகமாகவும் பயனளிக்கத்தக்க வகையிலும் நடைபெற்றது.

ஆனால் இம்முறை, கடந்த செப்டம்பர் 28-ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட துல்லியத்தாக் குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் காரசாரமான விவாதத்தை முன்னெடுக்கக் கூடும். ஆளும் பாஜக அரசு ராணுவத்தின் நடவடிக்கையை அரசியலாக்குவதாகவும், ஆதாயம் தேடுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மாறாக, ராணுவத்தின் தியாகத்தை எதிர்க்கட்சிகள் சிறுமைப் படுத்துவதாக பாஜக குற்றம்சாட்டி யுள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன. எனவே, இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள் குளிர்காலக் கூட்டத்தொடரில் அரசின் இயல்பான அலுவல்களைப் பாதிக்கக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x