நாகாலாந்தில் வீர மரணமடைந்து 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ வீரர் உடல் கேரளாவில் அரசு மரியாதையுடன் அடக்கம்

நாகாலாந்தில்  வீர  மரணமடைந்து   24  ஆண்டுகளுக்குப்  பின் ராணுவ வீரர் உடல் கேரளாவில் அரசு மரியாதையுடன் அடக்கம்
Updated on
1 min read

நாகா தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த லெப்டினென்ட் இ.தாமஸ் ஜோசப்பின் உடல் 24 ஆண்டுகளுக்கு பின், கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

நாகாலாந்தில் கடந்த 1992, ஜூன் 12-ல் நாகா தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின்போது ராணுவ வீரர் இ.தாமஸ் ஜோசப் உயிரிழந்தார்.

அவரது உடல் நாகாலாந்தின் சக்கபாமா சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது. ஜோசப்பின் உடல் தங்களது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அவரது தந்தையான சுபேதார் மேஜர் (ஓய்வு) ஏ.டி.ஜோசப், தாய் ரோசம்மா ஜோசப் இருவரும் விரும்பினர். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஜோசப்புடன் பணியாற்றிய சக வீரர்கள் முயற்சி எடுத்தனர். இதன் காரணமாக, நாகாலாந்தில் புதைக்கப்பட்ட ஜோசப்பின் உடலை தோண்டி எடுத்து கேரளாவில் அடக்கம் செய்ய ராணுவ அதிகாரிகள் சம்மதித்தனர்.

இதைத்தொடர்ந்து ஏ.டி.ஜோசப்பும், ரோசம்மா ஜோசப்பும் நாகாலாந்து விரைந்தனர். அங்கிருந்து மூவர்ண கொடி போர்த்திய தங்களது மகனின் உடல் மீதங்கள் அடங்கிய சவப்பெட்டியை சுமந்து வந்து 24 ஆண்டுகளுக்குப் பின் கேரளாவில் உள்ள தங்களது சொந்த ஊரான கன்ஜிராமட்டோம் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

அங்கு முழு அரசு மரியாதையுடன் ஜோசப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று முன் தினம் அவரது உடலுக்கு ஹோலி கிராஸ் தேவாலயத்தில் இறுதி சடங்குகளும், பிரார்த்தனைகளும் நடந்தன. இதில் ஜோசப்பின் குடும்பத்தினரும், ராணுவ உயரதிகாரிகளும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in