Published : 13 Aug 2022 05:28 AM
Last Updated : 13 Aug 2022 05:28 AM

நிதீஷ் வெளியேறிய பின்னரும் சரியாத பிரதமர் மோடியின் செல்வாக்கு - 2024 தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும் என கணிப்பு

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (என்டிஏ) நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சி வெளியேறிய பின்னரும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரியவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி ஆட்சியைக் கவிழ்த்தார். இதைத் தொடர்ந்து அங்கு அதிருப்தி சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில் பிஹாரில் ஆட்சியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி உடைந்தது. அங்கு ஆட்சியில் இருந்த ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமா் பாஜகவுடனான கூட்டணியை முறித்து, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்தார். இது தேசிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தேசிய அரசியலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிஹார் மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது 2024 மக்களவைத் தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளைக் கூறி வருகின்றனர். 2024 தேர்தலில் இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் சிலரும், ஏற்படுத்தாது என்று சிலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக இந்தியா டுடே செய்தி நிறுவனம், சிவோட்டர்ஸ் உடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அதில் பிரதமர் மோடிக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிஹார் மாநில அரசியல் குழப்பங்கள் அவருக்கு எவ்வித பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெறும் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையிலும் பிரதமருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.

2024 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 286 இடங்களில் வெல்லும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம், கரோனா பரவல், பெட்ரோல் - டீசல் விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் இருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடிதான் நாட்டில் பிரபலமான அரசியல்வாதியாகத் திகழ்கிறார். வரும் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும் என சுமார் 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அவருக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளார். அவருக்கு 9 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 7 சதவீதம் பேர் ஆதரவு அளித்து உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x