Last Updated : 12 Oct, 2016 08:24 PM

 

Published : 12 Oct 2016 08:24 PM
Last Updated : 12 Oct 2016 08:24 PM

தீவிரவாதிகளுக்கு அணு ஆயுதங்கள் கிடைக்க பாகிஸ்தான் உதவி: இந்தியா குற்றச்சாட்டு

தீவிரவாதிகளுக்கு அணு ஆயுதங்கள், மூலப்பொருட்கள் கிடைக்க பாகிஸ்தான் உதவியாக உள்ளது என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, ஆயுதக் குறைப்பு மாநாட்டு அமைப்புக்கான இந்திய பிரதிநிதி ஆலோசகர் சித்தார்த்தா நாத் கூறியதாவது:

அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே, அணு ஆயுத மூலப்பொருள்களுக்கான இணைப்பு இருப்பதும், கட்டுப்பாடற்ற அணு ஆயுத மூலப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோக முறையும், தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

அணு ஆயுத பரவலுக்கான அபாயத்தை தொடர்ந்து இருக்கச் செய்பவர்கள் மீது சர்வதேச சமுதாயம் ஒற்றுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அணு ஆயுத பெருக்க தொடர்புகள் இன்றும் செயல்பாட்டில் உள்ளன. அதற்கு பாகிஸ்தான் உடந்தையாக இருப்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது.

சர்வதேச படைக்குறைப்பு தீர்மானம் மற்றும் படைக்குறைப்பு மாநாட்டு அமைப்பின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதற்கு பாகிஸ்தானே தனித்து பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாகிஸ்தான் தரப்பு பிரதிநிதி பதிலளிக்கும்வகையில் பேசும்போது, “அணு ஆயுத பரிசோதனைக்கு தடை விதிக்கும் இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசு பதிலளிக்காமல் இருப்பது ஏன்? ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்காக அணு உலைக்காக வழங்கப்பட்ட மூலப்பொருட்களை திசை திருப்பி இந்தியாதான் முதன்முறையாக 1974-ம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்தியது. மாறாக தெற்காசியாவில் அணு ஆயுதம் இல்லாமல் செய்ய பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அணு ஆயுத பரிசோதனைக்கு தடைவிதிக்கும் இருதரப்பு ஒப்பந்தத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு இந்தியப் பிரதமர் பதிலளிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x