Published : 12 Aug 2022 07:53 AM
Last Updated : 12 Aug 2022 07:53 AM

“தியேட்டருக்கு வரும் வழியில் பள்ளம் இருக்கலாம்” - கேரளாவில் அரசியல் சர்ச்சைகளுக்கு வித்திட்ட ஒற்றை போஸ்டர்

ஆலப்புழா: கேரளாவில் ஒரு திரைப்படத்தின் ஒற்றை போஸ்டர் அரசியல் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

ஆன்ராய்டு குஞ்சப்பன் பட புகழ் இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் இயக்கத்தில் குஞ்சாகோ போபன், காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ந்நா தான் கேஸ் கொடு' (Nna, Thaan Case Kodu). மலையாள படமான இது நேற்று (ஆகஸ்ட் 11) திரையரங்குகளில் வெளியானது. இதில் சைஜூ குரூப், வினய் போர்ட், ஜாபர் இடுக்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் முதல் காட்சி திரையரங்குகளில் வெளியாகும் முன்பே சர்ச்சைகளை சந்தித்தது. சர்ச்சைக்கு படத்தின் ஒரு போஸ்டரே காரணம்.

நேற்று காலை பத்திரிகைகளில் வெளிவந்த படத்தின் போஸ்டரில், "தியேட்டருக்கு வரும் வழியில் பள்ளங்கள் இருக்கலாம். ஆனாலும் படத்துக்கு வரவேண்டும்" என்று சொல்லப்பட்டது. ஒரு திருடனின் வாழ்க்கையை சாலையில் உள்ள பள்ளங்கள் ஏற்படும் சம்பவம் எப்படி மாற்றுகிறது என்பதை கதை பின்னணியாக கொண்ட படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதால், இந்த டேக் லைன் உடன் விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆளுங்கட்சியை விமர்சிக்கும் வகையில் படத்தின் போஸ்டர் விளம்பரப்படுத்தப்பட்டதாக கேரளாவை ஆளும் இடதுசாரி கட்சிகளின் தொண்டர்கள் இணையத்தில் படத்துக்கு எதிராக கொந்தளித்தனர். இடதுசாரி கட்சித் தொண்டர்கள் யாரும் படத்துக்குச் செல்லக் கூடாது என்று பதிவிட தொடங்கினர்.

இதனால் நேற்று காலை முதலே படம் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. அதேநேரம் அரசியல் சர்ச்சையாகவும் மாறியது. ஆளும் இடதுசாரிகள் படத்துக்கு எதிராக பேசத் தொடங்க எதிர்க்கட்சிகள் படத்துக்கு ஆதரவாக பேசினர். கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன் "ஆளும் கட்சியின் நாளேடான தேசாபிமானி பத்திரிகையின் முதல் பக்கத்தில் படத்தின் போஸ்டர் விளம்பரமாக வந்துள்ளது. இது உண்மையை தான் சொல்லுகிறது. சாலைகளில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளை பொதுமக்களே போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆனால் ஆளும்கட்சியினர் அதை எதிர்க்கின்றனர். சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இதேபோல் பாஜக தலைவரும் ஆளும் கட்சியை விமர்சிக்க, கேரள பொதுப்பணித்துறை அமைச்சரும் பினராயி விஜயன் மருமகனுமான முகமது ரியாஸ் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். "அது சினிமா விளம்பரமாகும். சினிமா விளம்பரத்தை சினிமாபோல பார்த்தாலே போதும். சாலைகளில் பள்ளங்கள் ஏற்படுவது என்பது இப்போதல்ல கேரளம் உருவானது முதல் உள்ள பிரச்சனையாகும். அவற்றை சரி செய்ய வேண்டும் என்பது அவசியமானது. சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் வழி இதை சரிசெய்ய ஆலோசித்து வருகிறோம்" என்று முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.

படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான குஞ்சக்கோ போபன் சம்பவம் தொடர்பாக பேசுகையில், "படம் பேசும் பிரச்சனை சாலைகளில் உள்ள பள்ளம் மட்டும் இல்லை. ஆனாலும் இதுவும் ஒரு முக்கிய காரணம். ஒரு பள்ளம் எப்படி ஒரு தொழிலாளியின் வாழ்க்கையை பாதித்தது என்பதை நகைச்சுவையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறோம். எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது ஒரு அரசையோ மனதில் வைத்து இந்தப் படம் எடுக்கப்படவில்லை.

ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் சாமானியர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும். நகைச்சுவை கலந்த இந்தப் படம் பல்வேறு நிலைகளில் பிரச்சனைகள் எப்படி எழுகிறது என்பதை சொல்கிறது. மற்றபடி, கேரள அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x