

மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெலங்கானாவுக்கு ரூ.1,000 கோடி வழங்க கோரி ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் நேற்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதும், துறை வாரியாக இரு மாநிலங்களுக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அந்த வகையில் இந்து அறநிலையத் துறை சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து ஆண்டுதோறும் ரூ.56 லட்சம் தெலங்கானாவுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து தெலங்கானாவுக்கு ரூ.1,000 கோடி வழங்க கோரி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சவுந்தர்ராஜன் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில் ‘மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில் 1987 முதல் 2014 வரை கணக்கிட்டு தெலங்கானாவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.1,000 கோடி வழங்க உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற ஹைதராபாத் உயர் நீதிமன்றம் இது குறித்து 3 வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யும்படி ஆந்திரா, தெலங்கானா அரசுகளுக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.