Published : 09 Aug 2022 03:20 PM
Last Updated : 09 Aug 2022 03:20 PM

பிஹாரில் ஜேடியு - பாஜக கூட்டணி முறிவு: நிதிஷ் குமாரின் ‘மெகா’ கூட்டணி திட்டம்

பாட்னா: பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) - பாஜக கூட்டணி முறிந்தது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கைகோத்து ‘மெகா கூட்டணி’ திட்டத்துடன் ஆட்சியில் தொடர முதல்வர் நிதிஷ் குமார் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

பிஹார் மாநில முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் இன்று தனது கட்சி எம்எல்ஏக்களுடன் பாட்னாவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், ஜேடியு - பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக முறைப்படி அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசும்போது, பாஜக எப்போதுமே ஐக்கிய ஜனதா தள தலைவர்களை அவமதித்து வந்ததாகவும், தங்கள் கட்சியை பல்வீனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் சாடினார்.

இதன் தொடர்ச்சியாக, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்துள்ள நிதிஷ் குமார், 161 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் இன்று மாலை ஆளுநரை சந்திக்கவுள்ளார்.

புதிய அரசில் நிதிஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இருப்பார் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் பதவி ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, ஆட்சி மாற்றம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் துணைத் தலைவர் சிவானந்த் திவாரி நேற்று கூறும்போது, “பாஜகவை எதிர்த்து போரிடுவதில் ஆர்ஜேடி உறுதியாக உள்ளது. இந்தப் போரில் இணைவது என நிதிஷ் குமார் முடிவு செய்தால், அவரை எங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம்” என்றது குறிப்பிடத்தக்கது.

பின்னணி என்ன? - கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 43 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால், நிதிஷ் குமாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பாஜகவின் கை ஓங்கி இருந்தது. இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் போராட்டம் நடந்தபோது மத்திய அரசை, நிதிஷ் கட்சியினர் விமர்சித்தனர்.

பிஹார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு விழா அண்மையில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடர்பான மலரில் முதல்வர் நிதிஷ் குமார் படம் இடம்பெறவில்லை.

கடந்த 22-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்குமாறு பாஜக விடுத்த அழைப்பையும் நிதிஷ் குமார் நிராகரித்தார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற விழாவிலும் நிதிஷ் பங்கேற்கவில்லை.

இதனிடையே, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அண்மைக்காலமாக நிதிஷ் குமாரை அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இரு கட்சிகளிடையே மீண்டும் நெருக்கம் அதிகரித்தது.

கட்சிகளின் பலம்: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு விஐபி கட்சியில் இருந்து 3 எம்எல்ஏ.க்கள் பாஜகவில் இணைந்ததால் அந்தக் கட்சியின் பலம் 77 ஆக உள்ளது. பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு சிறிய கட்சிகளை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர். அந்தக் கட்சியின் பலம் 45 ஆக உயர்ந்தது.

லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 75, காங்கிரஸ் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு பிறகு ஒவைசியின் 4 எம்எல்ஏக்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தனர். மேலும், இடைத்தேர்தலில் ஓர் இடத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. இதனால், அந்தக் கட்சியின் பலம் 80 ஆக அதிகரித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x