Published : 09 Aug 2022 05:52 AM
Last Updated : 09 Aug 2022 05:52 AM

பிஹார் அரசியலில் திடீர் திருப்பம்: ஜேடியு - பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து; லாலுவுடன் கைகோக்கிறார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மாநில முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவுடன் கைகோக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 43 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், நிதிஷ் குமாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பாஜகவின் கை ஓங்கி இருந்தது. இதன்காரணமாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் போராட்டம் நடந்தபோது மத்திய அரசை, நிதிஷ் கட்சியினர் விமர்சித்தனர்.

பிஹார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு விழா அண்மையில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடர்பான மலரில் முதல்வர் நிதிஷ் குமார் படம் இடம்பெறவில்லை.

கடந்த 22-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்குமாறு பாஜக விடுத்த அழைப்பையும் நிதிஷ் குமார் நிராகரித்தார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற விழாவிலும் நிதிஷ் பங்கேற்கவில்லை.

இதனிடையே, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அண்மைக்காலமாக நிதிஷ் குமாரை அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இரு கட்சிகளிடையே மீண்டும் நெருக்கம் அதிகரித்தது.

11-ம் தேதி புதிய ஆட்சி?

இந்தச் சூழலில் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து நாளை மறுதினம் புதிய கூட்டணி அரசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் பிஹார் அரசியலில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்

ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் கூட்டம் பாட்னாவில் இன்று நடக்கும் என்று அந்தக் கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதேபோல ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டமும் பாட்னாவில் இன்று நடக்கிறது. முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆட்சி மாற்றம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் துணைத் தலைவர் சிவானந்த் திவாரி நேற்று கூறும்போது, “பாஜகவை எதிர்த்து போரிடுவதில் ஆர்ஜேடி உறுதியாக உள்ளது. இந்தப் போரில் இணைவது என நிதிஷ் குமார் முடிவு செய்தால், அவரை எங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம்” என்றார்.

கட்சிகளின் பலம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு விஐபி கட்சியில் இருந்து 3 எம்எல்ஏ.க்கள் பாஜகவில் இணைந்ததால் அந்த கட்சியின் பலம் 77 ஆக உள்ளது. பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு சிறிய கட்சிகளை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர். அந்தக் கட்சியின் பலம் 45 ஆக உயர்ந்தது.

லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 75, காங்கிரஸ் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு பிறகு ஒவைசியின் 4 எம்எல்ஏக்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தனர். மேலும், இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. இதனால், அந்த கட்சியின் பலம் 80 ஆக அதிகரித்தது.

பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் நிதிஷ் குமாரும் லாலுவும் கைகோத்தால் புதிய கூட்டணி அரசு உருவாகும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x