Published : 09 Aug 2022 06:35 AM
Last Updated : 09 Aug 2022 06:35 AM

சட்டவிரோத ஆயுத வழக்கில் உ.பி. அமைச்சருக்கு ஓராண்டு சிறை

கான்பூர்: உத்தர பிரதேச அரசில் குறு, சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக ராகேஷ் சச்சன் பதவி வகிக்கிறார். கடந்த1991-ம் ஆண்டில் அவரது வீட்டில் இருந்து உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 31 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கடந்த 8-ம் தேதி தீர்ப்பளித்த கான்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், அமைச்சர் ராகேஷ் சச்சனை குற்றவாளியாக அறிவித்தார். அப்போது வழக்கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்களுடன் அமைச்சர் தலைமறைவானதாக புகார் எழுந்தது.

இந்த சூழலில் கான்பூர் நீதிமன்றத்தில் அமைச்சர் ராகேஷ் சச்சன் நேற்று ஆஜரானார். உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் இருந்து சென்றதாக அவர் விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் தண்டனை விவரத்தை அறிவித்தார். அமைச்சர் ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு சிறையும் ரூ.1,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், ரூ.50,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அமைச்சர் ராகேஷ் சச்சன் தெரிவித்துள்ளார்.

மற்றொரு அமைச்சர் கைது?

உத்தர பிரதேச மீன் வளத் துறை அமைச்சராக சஞ்சய் நிஷாத் பதவி வகிக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற கலவரத்தை தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

விசாரணைக்கு அவர் ஆஜர் ஆகாததால் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரக்பூர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. தற்போது அவர் ஆந்திராவில் அரசு முறை பயணமாக இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x