Published : 14 Jun 2014 09:53 AM
Last Updated : 14 Jun 2014 09:53 AM

முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் மீது ஊழல் வழக்கு: சிபிஐ-க்கு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழல் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐ-யிடம் ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சிபிஐ இயக்குநரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த 2006-ம் ஆண்டு விமானப் பயணிகளை பயோமெட்ரிக் முறையின் கீழ் அடையாளம் காணும் கருவியை குறிப்பிட்ட விமான நிலையங்களில் பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்கு விண்ணப்பித்த 20 நிறுவனங்களில் கனடாவைச் சேர்ந்த கிரிப்டோமெட்ரிக் உள்ளிட்ட இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன.

இந்நிறுவனத்தைச் சேர்ந்த நாசிர் கரிகர், அப்போது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் படேலுக்கும், ஏர் இந்தியா முன்னாள் தலைவர் துளசிதாசுக்கும் ஏர் இந்தியா ஒப்பந்தத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், நாசிர் கரிகருக்கு கனடாவின் ஒன்டாரியோ நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கடந்த மே 23-ம் தேதி இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் பிரபுல் படேல் மற்றும் அதிகாரிகள் மீது இந்தியாவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் ஜிதேந்திர பார்கவாவும் தனது நூலில் விமான ஒப்பந்தங்களில் எப்படி எல்லாம் ஊழல் நடக்கிறது என்பதை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதுகுறித்து சிபிஐ உடனே வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பிரசாந்த் பூஷன் தன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல், கடந்த 2004 முதல் 2011-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x