Published : 02 Aug 2022 05:28 AM
Last Updated : 02 Aug 2022 05:28 AM

தற்கொலை செய்துகொண்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் கண்கள் தானம்

உமா மகேஸ்வரி

ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர், நடிகர், ஆந்திர முன்னாள் முதல்வரான என்.டி.ராமாராவிற்கு 8 மகன்கள் மற்றும் லோகேஸ்வரி, புரந்தரேஸ்வரி, புவனேஸ்வரி, உமா மகேஸ்வரி என 4 மகள்கள். இதில், சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவவேஸ்வரி.

உமா மகேஸ்வரி (52), என்.டி.ஆரின் 4-வது மகள். இவர் சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் காணப்பட்டார். இந்நிலையில், நேற்று மதியம், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டின் படுக்கை அறை மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார், இதுகுறித்து சந்திரபாபு நாயுடு, சகோதரரும், நடிகருமான பாலகிருஷ்ணா உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனைசெய்து, உடலை நடிகர் பாலகிருஷ்ணாவிடம் ஒப்படைத்தனர்.

இவரது திடீர் தற்கொலை குடும்பத்தாரையும், தெலுங்கு அரசியல், சினிமா துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரின் வீட்டிற்கு பலர் வந்த வண்ணம் உள்ளனர்.

கண்கள் தானம்

உமா மகேஸ்வரியின் கணவர் ஸ்ரீநிவாச பிரசாத். இவர் அமெரிக்காவில் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு விஷாலி, தீக்‌ஷிதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் 2-ம் மகள் தீக்‌ஷிதாவிற்கு திருமணம் நடந்தது. இவரும் சம்பவம் நடந்த போது வீட்டில் இருந்துள்ளார். இவர்தான் தனது தாய் மரணமடைந்தது குறித்து போலீஸாருக்கு தகவல்அளித்தவர்.

உமா மகேஸ்வரியின் கண்களை அவரது குடும்பத்தினர் நேற்று தானம் செய்தனர். அமெரிக்காவில் இருந்து மகள் விஷாலி குடும்பத்தினர் வர வேண்டி உள்ளதால், இறுதிச் சடங்குகள் புதன் கிழமை ஹைதராபாத்தில் நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x