Last Updated : 01 Aug, 2022 08:08 PM

 

Published : 01 Aug 2022 08:08 PM
Last Updated : 01 Aug 2022 08:08 PM

இடம்பெயர்ந்த பழங்குடி மக்களின் நிவாரணம் குறித்த விவரம் இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு  

புதுடெல்லி: இடம்பெயர்ந்த பழங்குடி மக்களுக்களுக்கான நிவாரணம் குறித்த விவரம் மத்திய அரசிடம் இல்லை என்ற தகவலை மத்திய பழங்குடியினர் துறை இணை அமைச்சர் மக்களவையில் வெளியிட்டார்.

இது குறித்து விழுப்புரம் மக்களவை தொகுதியின் எம்.பியான டி.ரவிக்குமார் எழுப்பியக் கேள்வியில், ''இடம்பெயர்ந்த பழங்குடி மக்களுக்காக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களின் விவரம் என்ன?

இந்த வளர்ச்சித் திட்டங்களால் பயனடைந்த பழங்குடியின மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இவர்களில் எவ்வளவு பேருக்கு கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசின் கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் அளித்த எழுத்துபூர்வமான பதில்: ''நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம், (RFTCLARR) 2013இல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமையை இந்திய அரசு உறுதிசெய்துள்ளது.

இச்சட்டத்தின், இரண்டாவது அட்டவணை, சட்டத்தின் முதல் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ள நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையுடன், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான உறுதியை வழங்குகிறது.

மூன்றாவது அட்டவணையின்படி, மீள்குடியேற்றப் பகுதியில் நியாயமான முறையில் வாழக்கூடிய மற்றும் திட்டமிட்ட குடியேற்றத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது. நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவை மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் விதிமுறைகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இந்தத் திட்டங்களின் பயனாளிகள் தொடர்பான தகவல்கள் இந்திய மத்திய அரசின் பங்குடியின மேம்பாட்டு அமைச்சகத்தால் பராமரிக்கப்படவில்லை'' என்று எமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x