Published : 13 Jun 2014 09:18 AM
Last Updated : 13 Jun 2014 09:18 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக அரசு நாளை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக சட்ட நிபுணர் களுடன் மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெங்க ளூரில் வியாழக்கிழமை ஆலோ சனை நடத்தினார்.
உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வரவிருப்பதாக தெரிகிறது.அப்போது கர்நாடக அரசு சார்பில் புதிய மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சிக்கலில் காவிரி வாரியம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதற்கு அடுத்த நாளே மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்படி தடுக்க முயற்சி
இதனையும் மீறி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரி யம் அமைத்தால் அதனை சட்டப்படி தடுக்கும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. காவிரி தொடர்பான வழக்குகளில் கர்நாடகா சார்பில் வாதாடும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பாலி நாரிமனை கடந்த ஜூன் 4-ம் தேதி அவசர அவசரமாக பெங்களூர் வருமாறு மாநில அரசு அழைத்தது.
கடந்த ஒரு வாரமாக பெங்க ளூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி, காவிரி வழக்கு கள் குறித்து சட்ட நிபுணர் களுடன் அவர் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டார்.கடந்த புதன்கிழமை மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனை முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து கூறினார். அதற்கு பாலி நாரிமன்,'கர்நாடக மக்கள் கவலைப்பட வேண்டாம். தமிழகம் எத்தனை மனு போட்டா லும் மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது' என கூறியதாகத் தெரிகிறது.
இதனிடையே கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, நீர்ப் பாசனத் துறை அமைச்சர் எம்பி பாட்டீல் மற்றும் காவிரி நீர்ப் பாசனக் குழு அதிகாரிகள் வியாழக்கிழமை மீண்டும் சட்ட நிபுணர்களுடன் தனியார் விடுதியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகாவின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், மூத்த வழக்கறிஞர்கள் மோகன் கடார்கி, எஸ்.எஸ்.ஜவளி மற்றும் பிரிஜேஷ் காலப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனைகள் குறித்து, கர்நாடக மாநில தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா, 'தி இந்து' செய்தியாளரிடம் கூறியதாவது: ''காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தற்போது அமலில் இருக்கும் காவிரி மேற்பார்வை குழுவே போதுமானது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை.
காவிரி பற்றிய பல்வேறு வழக்குகளும், பல நூறு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இவை விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளியாக கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது. அதுமட்டுமில்லாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சார்பாக முறையிடவும் திட்டமிட்டுள்ளோம்''என்றார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான மனு உச்சநீதி மன்றத் தில் நாளை (சனிக்கிழமை) விசாரணைக்கு வரவிருப்பதாக தெரிகிறது. அப்போது கர்நாடக அரசு சார்பாக புதிய மனு தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT