குஜராத்தில் போதை மாஃபியாவை எந்த ஆளும் சக்தி பாதுகாக்கிறது? - ராகுல் கேள்வி

குஜராத்தில் போதை மாஃபியாவை எந்த ஆளும் சக்தி பாதுகாக்கிறது? - ராகுல் கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: குஜராத்தில் போதைப் பொருள் மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்தி பாதுகாப்பு அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் ரோஜிட் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளச் சாராயம் குடித்த பலருக்கு மறுநாள் அதிகாலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

விஷச் சாராயத்துக்கு 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளச் சாராயம் காரணமாக குஜராத்தில் பல குடும்பங்கள் அழிந்துள்ளன. குஜராத்தில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த மண்ணில், கண்மூடித்தனமாக போதை வியாபாரம் செய்கிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். குஜராத்தில் செயல்படும் இந்த மாஃபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்தி பாதுகாப்பு அளிக்கிறது" என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in