Published : 30 Sep 2016 06:35 PM
Last Updated : 30 Sep 2016 06:35 PM
கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியில் தற்செயலாக பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிடியில் இந்திய வீரர் இருப்பது பற்றிய தகவல்களை கவனத்தில் கொண்டுள்ளோம், பாகிஸ்தான் தரப்புடன் பேசியுள்ளோம் என்று கூறினார் ராஜ்நாத்.
“அவரை மீட்க அனைத்து முயற்சிகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார் ராஜ்நாத் சிங்.
ஆயுதத்துடன் கட்டுப்பாட்டு எல்லையக் கடந்து தற்செயலாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் நுழைந்தார் என்று ராணுவ வட்டாரங்கள் வியாழனன்று தெரிவித்தன. இது குறித்து பாகிஸ்தான் ராணுவ தலைமைக்கு ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தினரின் துல்லிய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 8 இந்திய வீரர்கள் பலியானதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி ஆதாரமற்றது, தவறானது என்று இந்திய ராணுவம் கடுமையாக மறுத்துள்ளது.
பாகிஸ்தான் டான் ஊடகம்தான் பாகிஸ்தான் ராணுவம் கூறியதாக இந்தச் செய்தியை வெளியிட்டது. ஆனால் அதில்தான் ஒரு ராணுவ வீரரை பிடித்து விட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அவரை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT