

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை அழித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தியமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தநிலையில் ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இன்று முதல் விலை அதிகமாக இருக்கும் பொருட்களின் பட்டியலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி. வரியை ‘கப்பர் சிங் டேக்ஸ்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
“அதிக வரி, வேலை இல்லை. ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை எப்படி அழிப்பது என்பது தான் பாஜகவின் மாஸ்டர் கிளாஸ்.’’ எனக் கூறியுள்ளார்.