Published : 07 Jul 2022 06:16 AM
Last Updated : 07 Jul 2022 06:16 AM

வெளிநாடுகளில் கிராக்கி அதிகரிப்பு - நெல், கோதுமையை அதிகமாக பயிரிட மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: நடப்பு சீசனில் நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது. இதை அதிகரிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இந்தியாவின் அரிசி, கோதுமைக்கு கடுமையான தேவை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பரப்பளவை அதிகரிக்குமாறு மத்திய உணவுத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மாநில உணவு அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல், கோதுமை அதிகம் பயிரிடும் மாநிலங்கள் மாற்று பயிர்களான எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகளை பயிரிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில் நெல் பயிரிடும் பரப்பளவு 16 சதவீதம் குறைந்துள்ளது. எனவே கடந்த ஆண்டு அளவைப் போல நெல் பயிரிடும் பரப்பளவை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே நெல் பயிரிடும் வயல்களில் மாற்று பயிர்களாக எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகளைப் பயிரிட்டிருந்தால் அது வரவேற்கத்தக்கதாகும். அதேசமயம் நெல் சாகுபடி மற்றும் உற்பத்தி குறையாமலிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மாநில அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார்.

தற்போது மத்திய அரசிடம் போதுமான கையிருப்பில் அரிசி உள்ளது. ஆனால் சர்வதேச அளவில் அரிசிக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே விவசாயிகள் நெல் பயிரிட்டால் சர்வதேச அளவில் அதற்கு நல்ல விலை கிடைக்கும், தேவைப்பட்டால் அரசும் கூடுதலாக கொள்முதல் செய்யத் தயாராக உள்ளதாக பியுஷ் கோயல் கூறினார். இதேபோல கோதுமை உற்பத்தி பரப்பளவை அதிகரிக்குமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

பெரும்பாலான மாநிலங்களில் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. சில பற்றாக்குறை மாநிலங்களில் தற்போது உபரி உற்பத்தி காணப்படுகிறது. இருப்பினும் மத்திய அரசின் தொகுப்புக்கான கொள்முதல் வரத்து ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதேசமயம் மாநிலங்களின் தேவை குறைந்து வரும்போது மத்திய அரசிடம் உள்ள இருப்பு அதிகரித்துவிடுகிறது.

இத்தகைய சூழலில் உபரி உற்பத்தி உள்ள மாநிலங்களுக்கு கோடவுன்களை மாற்ற முடியாது. இதன் காரணமாகவே உபரி உற்பத்தி மாநிலங்கள் மாற்று பயிர்களை சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்பட்டன. இதன் மூலம்தான் ஸ்திரமான வேளாண் வளர்ச்சிக்கு வழி காண முடியும் என்று பியுஷ் கோயல் குறிப்பிட்டார்.

2020-21-ம் ஆண்டில் 10 மாநிலங்களில் அரிசி உபரி உற்பத்தி இருந்ததாக மத்திய அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x