வரி ஏய்ப்பு புகார் - டோலோ 650 மாத்திரை நிறுவனத்தில் சோதனை

வரி ஏய்ப்பு புகார் - டோலோ 650 மாத்திரை நிறுவனத்தில் சோதனை
Updated on
1 min read

பெங்களூரு: டோலோ 650 மாத்திரை நிறுவனத்துக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது.

பெங்களூருவை சேர்ந்த மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் பாராசிட்டமால் வகை டோலோ 650 மாத்திரையை தயாரித்து வருகிறது. கரோனா பரவிய 2020-ம் ஆண்டு மட்டும் 350 கோடி மாத்திரைகளை விற்று ரூ.400 கோடி வரை அந்த நிறுவனம் வருமானம் ஈட்டியது.

இந்நிலையில் டோலோ 650 மாத்திரையை உற்பத்தி செய்யும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து டெல்லி, பெங்களூரு, கோவா, பஞ்சாப் உட்பட மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

இதுதவிர மைக்ரோ லேப்ஸின் தலைமை மேலாண் இயக்குநர் திலீப் சுரானா, இயக்குநர் ஆனந்த் சுரானா ஆகியோரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 8 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தலைமையகத்தில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in