உதய்பூர் கொலையாளிகளை பிடிக்க உதவிய கிராமவாசிகள் 2 பேருக்கு ராஜஸ்தான் முதல்வர் பாராட்டு

உதய்பூர் கொலையாளிகளை பிடிக்க உதவிய கிராமவாசிகள் 2 பேருக்கு ராஜஸ்தான் முதல்வர் பாராட்டு
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொடூர வீடியோவை பார்த்தபின், கொலையாளிகள் கவுஸ் முகமது, முகமது ரியாஸ் ஆகியோரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் தியோகர் மற்றும் பிம் ஆகிய இடங்களுக்கு இடையே இருப்பதை அறிந்த போலீசார், அந்தப் பகுதியை சேர்ந்த தார் கிராமத்தைச் சேர்ந்த சக்தி சிங் மற்றும் பிரகலத் சிங் ஆகியோரை போலீசார் தொடர்பு கொண்டனர். கொலையாளிகள் ஆர்.ஜே 27 ஏஎஸ் 2611 என்ற பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் தப்பி தியோகர் மற்றும் பிம் பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

அவர்களை பார்த்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினர். அப்போது போலீசார் தெரிவித்த பதிவு எண் கொண்ட வாகனத்தில் இருவர் பேருந்து நிலையம் அருகே நிற்பதை கண்டனர். இது குறித்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் கொலையாளிகள் பைக்கில் புறப்பட்டதும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் சக்தி சிங், பிரகலத் சிங் ஆகியோர் பின்தொடர்ந்து சுமார் 30 கி.மீ தூரம் சென்றபடியே போலீசாருக்கு தகவல் தெரிவித்து வந்தனர். அதற்குள் போலீஸார் தங்கள் வாகனங்களில் வந்து கொலையாளிகளை இடைமறித்து கைது செய்தனர்.

கொலையாளிகளை பிடிக்க உதவிய சக்தி சிங், பிரகலத் சிங் ஆகியோர் தற்போது ராஜஸ்தான் மாநில ஹீரோக்களாக மாறியுள்ளனர். இவர்களை முதல்வர் அசோக்கெலாட் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in