Published : 05 Jul 2022 03:00 PM
Last Updated : 05 Jul 2022 03:00 PM

ராகுல் காந்தி குறித்து போலிச் செய்தி: உ.பி போலீஸ் Vs சத்தீஸ்கர் போலீஸ்... டிவி நெறியாளர் மீதான ‘நடவடிக்கை’யில் நடந்தது என்ன?

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் வயநாடு சென்றிருந்தார். அங்கு அவரது கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து அவர் தெரிவித்த கருத்தை உதய்பூர் படுகொலைக்கு கூறியதாக மாற்றிக் கூறியதால் சர்ச்சை எழுந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் சத்தீஸ்கர் மாநிலப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

உண்மையை மாற்றிக் கூறிய நிருபரை கைது செய்ய சத்தீஸ்கர் போலீஸார் நிருபரின் வீட்டை முற்றுகையிட, நிருபர் அவர் வாழும் மாநிலமான உத்தரப் பிரதேச போலீஸாரிடம் உதவி கோர, இரு மாநில போலீஸாரும் வாக்குவாதச் சண்டையிட்டுக் கொண்டனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

ராகுல் காந்தி பேசியது என்ன? - அண்மையில் ராகுல் காந்தி வயநாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் தனது கட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர், "இதைச் செய்த குழந்தைகள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் விவரமறியா குழந்தைகள். மன்னித்துவிடுங்கள்" என்று கூறியிருந்தார்.

ராகுலின் இந்தக் கருத்தை அவர் உதய்பூர் படுகொலை சம்பவத்திற்காக கூறியதாக சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் நெறியாளர் கூறினார். குறிப்பிட்ட அந்த சேனலில் டிஎன்ஏ என்ற தலைப்பில் ஒரு டாக் ஷோ ஒளிபரப்பாகிறது. அதைத் தொகுத்து வழங்கும் ரோகித் ரஞ்சன் என்ற நெறியாளர்தான் தகவலை மாற்றிக் கூறினார். அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இதனால் அவரைக் கைது செய்ய சத்தீஸ்கர் போலீஸார் உத்தரப் பிரதேசம் சென்றனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவர்கள் ரோகித் ரஞ்சனின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். உடனே ரோகித் ரஞ்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உத்தரப் பிரதேச போலீஸாரிடம் உதவி கோரினார். “அவசரம்... என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அவர் உத்தரப் பிரதேச போலீஸார் உதவியை நாடினார்.

ரோகித் ரஞ்சன்

ட்விட்டரிலும் நீளும் வாக்குவாதம்: சத்தீஸ்கர் காங்கிரஸ் ஆளும் மாநிலம், உத்தரப் பிரதேசம் பாஜக ஆளும் மாநிலம். சம்பந்தப்பட்ட நெறியாளர் ராகுல் காந்தி மீது போலியான விமர்சனத்தை வைத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இந்தச் சூழலில் ரோகித் ரஞ்சன் வீட்டுவாசலில் சத்தீஸ்கர் போலீஸாரும், உத்தரப் பிரதேச போலீஸாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் போலீஸார் ரோகித் ரஞ்சனை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. வாரன்ட் இருப்பதால் ரோகித் ரஞ்சனை தங்களிடம் ஒப்படைக்குமாறு சத்தீஸ்கர் போலீஸார் ட்விட்டரிலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரோகித் ரஞ்சன் மீது காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைவர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தவறான செய்தி அடங்கிய வீடியோவைப் பகிர்ந்ததால் அவர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x