இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் பலி
Updated on
1 min read

குலு: இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர்.

இதுகுறித்து குலு துணை ஆணையர் அசுதோஷ் கார்க் கூறுகையில், "இன்று காலை பள்ளிக் குழந்தைகள் மற்றும் பிற பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சயிஞ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்து குலு பகுதியில் வந்தபோது திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பள்ளிக்குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து சரியாக 8.30 மணியளவில் நடந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மீட்புப் பணிகளில் உள்ளூர் மக்கள் உதவியுள்ளனர்" என்றார்.

விபத்துக்குள்ளான பேருந்தில் 40 மாணவர்கள் இருந்ததாகத் தெரிகிறது.

பிரதமர் இரங்கல்: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கில் குறிப்பில், இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். காயமடைந்தவர் விரைவில் குணம் பெற தான் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in