Published : 03 Jul 2022 05:25 AM
Last Updated : 03 Jul 2022 05:25 AM

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து | மகாராஷ்டிர மருந்துகடைக்காரர் கொலை - வழக்கை என்ஐஏ விசாரிக்க உத்தரவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மருந்துக் கடை உரிமையாளர் உமேஷ் கோல்கே கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று உத்தரவிட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் கால்நடை மருந்து கடை நடத்தி வந்தவர் உமேஷ் கோல்கே (54). இவர் கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு 10 மணியளவில், தனது கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். இவரது மகன் மற்றும் மனைவி மற்றொரு வாகனத்தில் உடன் சென்றனர்.

6 பேர் கைது

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், உமேஷ் கோல்கேவை வழிமறித்து, அவரை கழுத்தை அறுத்து கொன்றனர். இவரது கொலைக்கான காரணம் முதலில் தெரியவில்லை. இந்த கொலை தொடர்பாக முடாசிர் அகமது ஷேக் இப்ராகிம் (22), ஷாருக் பதன் கான் (23), அப்துல் தபீக் தஸ்லீம்(24), சோயீப் கான்(29) மற்றும் அதீப் ரசீத்(23) ஆகியோர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் உமேஷ் கோல்கே கருத்து தெரிவித்திருந்தார். அதனால் அவரை கழுத்தறுத்து கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிஒருவர் கூறுகையில், ‘‘நுபுர் சர்மாவுக்கு ஆதரவான கருத்தை உமேஷ் கோல்கே, தவறுதலாக தனது வாடிக்கையாளர்களின் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். அதில் சிலர் முஸ்லிம்களும் உள்ளனர். இதையடுத்து உமேஷ் கோல்கேவை கொலை செய்ய இர்பான் கான் என்பவர் 5 பேரை திரட்டியுள்ளார். அவர்களுக்கு ரூ.10,000 தருவதாகவும், தப்பிச் செல்ல கார் தருவதாகவும் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆனால், இத்தகவலை மறைக்க மகாராஷ்டிர போலீஸார் முதலில் முயற்சித்துள்ளதாக அமராவதி மாவட்ட பா.ஜ.க தலைவர் துஷர் பாரதியா கூறியுள்ளார். ‘‘இந்த கொலை கடந்த ஜூன் 21-ம் தேதியே நடந்துள்ளது. போலீஸார் உண்மையை மறைக்காமல் இருந்திருந்தால், உதய்ப்பூர் தையல்காரர் கொலை சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்’’ என துஷர் பாரதியா கூறியுள்ளார்.

தற்போது இந்த கொலை வழக்கை என்ஐஏ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதை அடுத்து, மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் இந்த கொலை வழக்கை விசாரிக்க அமராவதி சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x