Last Updated : 02 Jul, 2022 06:22 AM

 

Published : 02 Jul 2022 06:22 AM
Last Updated : 02 Jul 2022 06:22 AM

கன்னைய்யா லால் கொலை வழக்கில் 6 பேர் கைது - மேலும் ஒருவரை கொல்ல திட்டமிட்டது அம்பலம்

புதுடெல்லி: உதய்பூரின் தையல்காரர் கன்னைய்யா லால் டெனி (40) கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைதாகி உள்ளனர். இவர்களில் கன்னைய்யா லால் உடலிலிருந்து தலை துண்டாகும் என எச்சரித்த நால்வர் அஜ்மீரிலும், கொலையாளிகளுக்கு உதவியதாக இருவர் உதய்பூரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் இறைத்தூதரை பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா விமர்சித்திருந்தார். இதனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் நுபுர் சர்மாவுக்கு உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கன்னைய்யா லால் சமூக வலைதளத்தில் ஆதரவளித்தார்.

இதன் காரணமாக அவர் கடந்த 28-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகம்மது ரியாஸ் அத்தரி (38), கவுஸ் முகம்மது (39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, தேசிய புலனாய்வு நிறுவனமான என்ஐஏவால் விசாரிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் உதய்பூரின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கும் 14 நாள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. கன்னைய்யாவின் கொலைக்கு உதவியதாக மோசீன், ஆசீப் ஆகிய இருவரும் உதய்பூரில் என்ஐஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அதிக பாதுகாப்பு கொண்ட அஜ்மீர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கன்னைய்யாவை கொலையாளிகளில் ஒருவரான கவுஸ், பாகிஸ்தானின் தீவிரவாதிகள் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது வழிகாட்டுதலில் 2015 முதல் ராஜஸ்தானின் டோங்க், அஜ்மீர், உதய்பூர், ஜோத்பூர், ராஜ்சமந்த், பில்வாரா மற்றும் பண்டி ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் இளைஞர்களின் மனதை மாற்றி தீவிரவாத இயக்கங்களுக்கு அனுப்பி வந்துள்ளார். இதற்காக கவுஸுக்கு நிதி உதவி கிடைத்தது குறித்தும் என்ஐஏ விசாரிக்கிறது.

இதனிடையே, நுபுர் சர்மாவின் விமர்சனத்திற்கு பின் ராஜஸ்தானின் அஜ்மீர் தர்கா முன்பாக ஜுன் 17-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை நடத்திய அஜ்மீரின் மவுல்வி ஃபக்கர், தாஜீம் சித்திக்கீ, குஜராத்தை சேர்ந்த ரியாஸ் மற்றும் ஜெய்பூரைச் சேர்ந்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மதவாத வன்முறைப் பேச்சு அளித்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளன. இவர்கள், தம் இறைத்தூதரை விமர்ச்சிப்பவர்கள் உடலிலிருந்து தலையை துண்டாக்க வேண்டும் என கோஷமிட்டுள்ளனர். இதே கோஷத்தை, கன்னையாவின் கொலையாளிகளும் தங்களது வீடியோவில் பதிவாக்கி உள்ளனர். இதனால் கன்னையாவின் கொலையில் இந்த நால்வருக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரிக்கப்படுகிறது.

கன்னைய்யாவை போல், மேலும் ஒருவரை உதய்பூரில் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. உதய்பூரின் செக்டர் 11-ல் வசிக்கும் நிதின் ஜெயின் (35) வாகனங்களுக்கான டயர்கள் விற்பனை செய்கிறார். இவரும் கன்னைய்யாவை போலவே தவறுதலாக நுபுருக்கு சமூகவலைதளங்களில் ஜுன் 7-ல் ஆதரவளித்தவர். இவர் மீதான புகாரில் நிதின் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து இதுவரை 9 பேர் நிதினை மிரட்டிச் சென்றுள்ளனர். அப்போது முதல் தனது கடையையும், வீட்டையும் பூட்டி விட்டு நிதின் தம் உறவினர் வீடுகளில் தங்கி விட்டார். இதனால் அவர், தப்பித்ததாக கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x