மத்திய அரசில் 3 முக்கிய துறைகளில் 8,000 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு

மத்திய அரசில் 3 முக்கிய துறைகளில் 8,000 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய அரசில் 3 முக்கிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் 8,000 பேருக்கு பதவி உயர்வு வழங்க மத்திய பணியாளர் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மத்திய செயலக பணி (சிஎஸ்எஸ்), மத்திய செயலக சுருக்கெழுத்தாளர் பணி (சிஎஸ்எஸ்எஸ்), மத்திய செயலக கிளரிக்கல் பணி (சிஎஸ்சிஎஸ்) ஆகிய 3 முக்கிய துறைகளில் உள்ள 8,000 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 3 துறைகளும் மத்திய செயலக நிர்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன.

இதுபோன்ற முக்கிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் மத்திய அரசு ஊழியர்கள், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெறுவது வேதனையானது. இந்த சூழ்நிலையில், அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க பிரதமர் மோடி முடிவெடுத்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்தம் 8,089 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 4,734 பேர் சிஎஸ்எஸ், 2,966 பேர் சிஎஸ்எஸ்எஸ், 389 பேர் சிஎஸ்சிஎஸ் துறையை சேர்ந்தவர்கள். இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in