Last Updated : 01 Jul, 2022 05:20 AM

 

Published : 01 Jul 2022 05:20 AM
Last Updated : 01 Jul 2022 05:20 AM

உதய்பூர் கொலை | விசாரணையை தொடங்கியது என்ஐஏ - கன்னையா குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசு ரூ.51 லட்சம் நிதி

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) தனது விசாரணையை தொடங்கியது. இதில் குற்றவாளிகளைப் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

முஸ்லிம்களின் இறைத் தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பாஜக.வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்காக, கன்னையாவை, ராஜஸ்தானைச் சேர்ந்த முகம்மது ரியாஸ் அத்தரி (38), கவுஸ் முகம்மது (39) ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகலில் கொலை செய்தனர். இந்த வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது. கன்னையாவின் மகன் அளித்த புகாரில் பேரில், கொலையாளிகள் மீது தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

கன்னையாவை கொலை செய்த பின் இவர்கள் உதய்பூரின் சபேதியா பகுதியிலுள்ள எஸ்.கே. இன்ஜினியரிங் தொழிலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அமர்ந்து கொலைக்கான விளக்கத்தை வீடியோவாக பதிவாக்கி வாட்ஸ் அப்பில் வைரலாக்கினர்.

பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகள் கொண்ட ரியாஸ் தனியாக ஒரு வாட்ஸ்அப் குழுவை நடத்தியுள்ளார். இந்தக் குழுவில் உறுப்பினர்களையும் என்ஐஏ விசாரிக்கத் தொடங்கி உள்ளது.

இவர்களில் ஒருவராக இருந்த முகம்மது முஜீப் தனது ஐந்து சகாக்களுடன் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் ரட்லாமில் 12 ஆர்டிஎப் வெடிகுண்டுகளுடன் சிக்கினார். இவர்கள் ‘அல் சுபா’ எனும் பெயரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. கொலையாளிகள் இருவரும் உதய்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

இதனிடையே, கன்னையா லாலின் வீட்டிற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சென்று, அரசு நிவாரண உதவியாக ரூ.51 லட்சம் வழங்கினார். குடும்பத்தில் இருவருக்கு அரசு பணி அளிப்பதாகவும் அவர் கூறினார். கன்னையாவை காப்பாற்ற வந்து கத்திக் குத்துகளுடன் சிகிச்சை பெறும் ஈஸ்வர் சிங்கிற்கு ரூ.1 லட்சம் நிதியை ராஜஸ்தான் அரசு அளித்துள்ளது

ரூ.1.35 கோடி உதவி

படுகொலை செய்யப்பட்ட கன்னையா லால் குடும்பத் தினருக்கு பாஜக தலைவர் கபில் மிஸ்ரா நிதி திரட்டும் நடவடிக்கையை தொடங்கினார். இதில் 24 மணி நேரத்துக்குள், 12,000 பேர் ஆன்லைன் மூலம் ரூ.1.35 கோடி நிதி அளித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x