கோ-லொக்கேஷன் வழக்கு | என்எஸ்இ-க்கு ரூ.7 கோடி; சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.5 கோடி அபராதம் - ‘செபி’ நடவடிக்கை

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா
Updated on
1 min read

புதுடெல்லி: பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 2010-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனம் (என்எஸ்இ), கோ-லொக்கேஷன் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது, என்எஸ்இ சர்வருடன் புரோக்கிங் நிறுவனங்களின் சர்வர்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

இந்தக் கட்டமைப்பை முறைகேடாக பயன்படுத்தி சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பங்குச் சந்தை தொடர்பான விவரங்களை முன்னதாக வழங்கியதாக 2015-ம் ஆண்டு என்எஸ்இ மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து என்எஸ்இ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்குத் தொடர்பாக 18 பேர் மீது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி அபராதம் விதித்துள்ளது. என்எஸ்இ மீது ரூ.7 கோடி, அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நாராயண் மீது தலா ரூ.5 கோடி, என்எஸ்இ முன்னாள் குழும செயல்பாட்டு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் மீது ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, வே2வெல்த், ஜிகேஎன், சம்பார்க் ஆகிய நிறுவனங்கள் மீது ரூ.6 கோடி, ரூ.5 கோடி, ரூ.3 கோடி முறையே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் வேறு சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. 2013 முதல் 2016 வரையில் என்எஸ்இயின் சிஇஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனையின்படியே நிறுவனம் தொடர்பான அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுத்துவந்திருக்கிறார். அந்த யோகியின் அறிவுறுத்தலின் படியே, பங்குச் சந்தை நிர்வாகம் தொடர்பாக முன்அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை அதிக ஊதியத்துக்கு சித்ரா ராமகிருஷ்ணா பணிக்கு அமர்த்தினார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆனந்த் சுப்ரமணியனையும், மார்ச் முதல் வாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது. தற்போது அவ்விருவரும் திகார் சிறையில் உள்ளனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் சிபிஐயும் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in