Published : 30 Jun 2022 05:13 AM
Last Updated : 30 Jun 2022 05:13 AM

பிஹாரில் ஒவைசி கட்சியின் 4 எம்எல்ஏ ஆர்ஜேடியில் ஐக்கியம்

பாட்னா: பிஹாரில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ.க்கள் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் (ஆர்ஜேடி) சேர்ந்தனர்.

பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியாக ஆர்ஜேடி உள்ளது. இந்நிலையில், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த ஷாநவஸ் ஆலம் (ஜோகிஹட் தொகுதி), முகமது அன்சர் நயீமி ((பஹதூர்பூர்), முகமது இசார் அஸ்பி (கோச்சாதாமன்) சையித் ருக்னுதீன் அகமது (பைசி) ஆகிய 4 எம்எல்ஏ.க்கள் நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் ஆர்ஜேடியில் சேர்ந்தனர்.

இதனால், சட்டப்பேரவையில் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு தற்போது அக்தருல் இமான் (ஆமோர் தொகுதி) என்ற ஒரு எம்எல்ஏ. மட்டுமே உள்ளார். முன்னதாக, 4 எம்எல்ஏக்களும் தங்களை ஆர்ஜேடியில் இணைந்ததை ஏற்குமாறு சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமாரிடம் கடிதம் அளித்தனர். 4 எம்எல்ஏ.க்கள் சேர்ந்ததையடுத்து, ஆர்ஜேடியின் பலம் 80 ஆக உயர்ந்து சட்டப்பேரவையில் பெரிய கட்சியாகி உள்ளது.

ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 77 எம்எல்ஏ.க்களும் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 45 எம்எல்ஏ.க்களும் உள்ளனர். 243 உறுப்பினர்கள் கொண்ட பேரவையில் கூட்டணிக் கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏ.வையும் சேர்த்து ஆட்சிக்கு 127 எம்எல்ஏ.க்களுடன் மெஜாரிட்டி ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x